முல்லைத்தீவு மாவட்ட செயலக வளாகத்தில் இயற்கையான முறையிலமைந்த அலுவலக உணவுப் பயிர் தோட்டத்தினை அமைக்கும் நிகழ்வு இன்று(06) மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் தலைமையில் இடம்பெற்றது.
ஓன்றாக வளர்வோம் : நாட்டை வெல்வோம் – உணவுப் பயிர் உற்பத்திப் போர் 2022″ எனும் தொனிப்பொருளில் இத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது விவசாய போதனாசிரியர்களால் அனைத்து அலுவலர்களுக்கும் பயிர்ச் செய்கை செயன்முறைகள் தொடர்பான விளக்கவுரைகள் வழங்கப்பட்டன.
இயற்கை உரம் தயாரித்தல், பைகளில் பயிரிடுவதற்கான மண் , நாற்று மேடை தயாரித்தல் ஆகிய விடயங்கள் தொடர்பான செயன்முறை விளக்கங்கள் அளிக்கப்பட்டன.
மாவட்ட செயலக வளாகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இச் செயற்றிட்டத்திற்கு ஊழியர் நலன்புரி சங்கத்தின் நிதி பயன்படுத்தப்படுவதுடன் அறுவடை மற்றும் நாற்றுமேடை கன்றுகள் விற்பனையிலிருந்து பெறப்படும் வருமானத்தை கொண்டு குறித்த பணம் பூர்த்தி செய்யப்படும்.