“தடைக்காலத்தில் தரப்படாத நிவாரணத்தொகை… இனி தந்தும் பலனில்லை” – கலங்கும் மீனவர்கள்

தூத்துக்குடி மாவட்டத்தில் விசைப்படகு மீனவர்களுக்கான தடைக்காலம் இன்றுடன் (14-ம் தேதி) முடிவதை முன்னிட்டு விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்ல தயாராகி வருகின்றனர். மீன்களின் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் ஏப்ரல் 15-ம் தேதி முதல் ஜூன் 14-ம் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடித் தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த காலத்தில் விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

மீன்பிடித் துறைமுகம்

அதன்படி இந்த ஆண்டுக்கான 61 நாள் மீன்பிடித் தடைக்காலம் கடந்த ஏப்ரல் 15-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகம், வேம்பார், தருவைகுளம் ஆகிய இடங்களில் உள்ள மொத்தம் 543 விசைப்படகுகள் கடலுக்குள் செல்லாமல் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த 61 நாள்களிலும் மீனவர்கள் தங்கள் படகுகளை சீரமைத்தல், வலைகளை சரி செய்தல் போன்ற பணிகளை மேற்கொண்டனர்.

மேலும், தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தை ஆழப்படுத்தும் பணி நடைபெற்று வருவதால் கடந்த பிப்ரவரி மாதம் முதலே மீன்பிடி துறைமுகத்தில் உள்ள விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை. மீன்பிடித் தடைக்காலம் இன்று (14-ம் தேதி) முடிவடைவதை தொடர்ந்து சுமார் 4 மாதங்களுக்கு பிறகு நாளை (17-ம் தேதி) முதல் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் தயாராகி வருகின்றனர். விசைப்படகுகளில் டீசல் நிரப்புதல், படகுகளில் ஐஸ் கட்டிகள், வலைகள் உள்ளிட்ட மீன்பிடிக்குத் தேவையான பொருட்களை ஏற்றுதல் போன்ற பணிகளை இன்று மேற்கொண்டனர்.

மீன்பிடி வலைகள்

தடைக்காலம் முடிந்து கடலுக்கு செல்வதால் மீன்கள் அதிக அளவில் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் மீன்வர்கள் தயாராகி வருகின்றனர். இதுகுறித்து, தூத்துக்குடி மீனவர் சங்கத் தலைவர் தர்ம பிச்சையிடம் பேசினோம், ”கடந்த ஏப்ரல் 15 முதல் தடை விதிக்கப்பட்டதால் நாங்கள் மீன் பிடிக்க செல்லவில்லை. தற்போது தடை காலம் இன்றுடன் முடிவடைவதால் நாளை நாங்கள் மீன்பிடிக்க செல்வதற்காக தயாராகி வருகிறோம்.

இந்த மீன்பிடித்தடை காலத்தில் எங்களுக்கு வழங்க வேண்டிய தடைக்கால நிவாரணத்தொகையை அரசு இதுவரை வழங்கவில்லை. நாளை முதல் மீன் பிடிக்கச் செல்ல இருக்கிறோம். தடைக்காலத்தில் தரப்படாத உதவித்தொகை இனி கிடைத்தும் பலனில்லை. மீன்பிடி தடைக்காலத்தில் நாங்கள் அரசின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு வீட்டில் இருக்கிறோம். ஆனால், கேரளா மாநில விசைப்படகுகள் இங்கு வந்து மீன் பிடித்து நாசப்படுத்தி வருகிறது. இதனை பலமுறை சுட்டிக்காட்டியும் தடுக்க மீன் வளத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

படகுத்துறை மேடை

மீன்பிடித்தடைகால நிவாரணமாக அரசு தரும் 10 ஆயிரம் ரூபாய் நிதி உதவியால் நாங்கள் இரண்டு, மூன்று வாரங்களுக்குதான் சாப்பிட முடியும். நிவாரண தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். எங்களைப் போன்ற மீனவர்களுக்கு மீன்பிடித்தலைத் தவிர வேறு எந்தத் தொழிலும் தெரியாது. எனவே மீனவர்களின் வாழ்வாதாரத்தின் மீது அரசு கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும். மீனவர்களுக்கு ஓய்வூதியம் அளிக்க வேண்டும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.