கனடா நாட்டின் டொரன்டோ நகரில் ‘ஆகா கான்’ அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இதன் முக்கிய செயல் இஸ்லாமிய கலை மற்றும் கலாச்சாரத்தை பரப்பி வருவதுதான்.
இந்நிலையில், இந்த ‘ஆகா கான்’ அருங்காட்சியகத்தில் டொரன்டோ மெட்ரோ பாலிடன் பல்கலைக்கழகத்தின் பல்வேறு இன, கலாச்சார பின்னணி உடைய மாணவர்கள் தயாரித்த 18 ஆவணப்படங்களை ஒளிபரப்ப திட்டமிடப்பட்டது.
அதன்படி, தமிழகத்தைச் சேர்ந்த லீனா மணிமேகலையின் (கனடாவில் வசித்து வருபவர்) ‘காளி’ என்ற ஆவணப்படமும் இடம்பெற்றது. இந்த படத்தில் இந்து கடவுளை இழிவுபடுத்தும் வகையில் இருப்பதால் அதனை ஒளிபரப்ப கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.
இதற்கிடையே. இந்திய தூதரகம் கனடா அதிகாரிகளிடம் ஒரு புகார் ஒன்றை அளித்தனர். அதில், “காளி ஆவண படத்தின் போஸ்டர் இந்து கடவுளை அவமதிக்கும் வகையில் உள்ளதாக இந்துக்கள் புகார் தெரிவித்துள்ளனர். எனவே இந்த படத்தை வெளியிடக் கூடாது” என்று வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில், ஆகா கான் அருங்காட்சியகம் வெளியிட்ட அறிக்கையில்,
“இந்துக்களின் மனதை புண்படுத்துவதாக வந்த புகார் காரணமாக. அண்டர் த டென்ட் என்ற நிகழ்ச்சியில் ஒளிபரப்பாக உள்ள படங்கள் பட்டியலில் காளி ஆவணப்படம் ஒளிபரப்பப்பட மாட்டாது. பல்வேறு மத உணர்வுகள், நம்பிக்கையை மதிக்கிறோம்” என்று தெரிவித்துள்ளது.