‘நீங்கதான் ரியல் சூப்பர் ஸ்டார்’ – பாதுகாப்பு கொடுத்த போலீஸாரை வீட்டுக்கு அழைத்து ரஜினி பாராட்டு

சென்னை: செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவுக்கு தன்னை பாதுகாப்பாக அழைத்துச் சென்ற போலீஸாரை நடிகர் ரஜினிகாந்த் தனது வீட்டுக்கு நேரில் அழைத்து ‘நீங்கதான் ரியல் சூப்பர் ஸ்டார்’ என்று பாராட்டினார்.

மாமல்லபுரத்தில் நடக்கும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கடந்த 28-ம் தேதி மாலை நடைபெற்றது. போட்டியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின், மத்திய, மாநில அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், வெளிநாட்டு பிரதிநிதிகள், பல்வேறு நாடுகளை சேர்ந்த செஸ் வீரர், வீராங்கனைகள், முக்கிய பிரமுகர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் அமர்வதற்கு தனித்தனியாக இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. விஐபிக்களை விழா நடைபெறும் இடத்துக்கு அழைத்து வருவதற்கும், விழா முடிந்த பிறகு, அவர்களது இருப்பிடத்துக்கே மீண்டும் கொண்டு விடவும் தனித்தனியாக போலீஸார் நியமிக்கப்பட்டிருந்தனர்.

அதன்படி, தனது மகள் ஐஸ்வர்யாவுடன் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்தை அழைத்துச் செல்லும் பணி நுங்கம்பாக்கம் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அதன்படி, போலீஸார் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு, எந்தவிதமான சிரமம், இடையூறும் இன்றி எளிதாக சென்று வர நடவடிக்கை எடுத்திருந்தனர்.

இதனால் நெகிழ்ந்துபோன ரஜினிகாந்த், சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்த போலீஸாருக்கு நன்றி தெரிவித்தார். அதுமட்டுமின்றி, போயஸ் தோட்டம் வீட்டில் இருந்து நேரு உள் விளையாட்டு அரங்கத்துக்கு தன்னை பாதுகாப்புடன் அழைத்துச் சென்று மீண்டும் போயஸ் தோட்டம் வீட்டில் கொண்டுவிட்ட நுங்கம்பாக்கம் போலீஸ் எஸ்.ஐ.கள் குணசேகரன், மருது, கிருஷ்ணகுமார், தலைமைக் காவலர் அலாவுதீன், முதல்நிலை காவலர்கள் ராஜ்குமார், தங்கபாண்டி ஆகிய 6 போலீஸாரையும் ரஜினி நேற்று காலை தனது வீட்டுக்கு அழைத்து பாராட்டினார். அவர்களுடன் தனித்தனியாக புகைப்படமும் எடுத்துக் கொண்டார். ‘காவல்துறையினரான நீங்கதான் ரியல் சூப்பர் ஸ்டார்’ என்று ரஜினிகாந்த் பாராட்டியதாக போலீஸார் உற்சாகத்துடன் தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.