வடமதுரை அருகே மதுரை வீரன் கோவில் 32 பந்தி தெய்வங்களின் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில், மின் அலங்காரம் செய்யப்பட்ட ரதத்தில் சாமி புறப்பட்டது. பக்தர்கள் கரகாட்டம், வாணவேடிக்கையுடன் சாமியை ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.
இன்று காலை கங்கையில் இருந்து ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு அபிஷேகங்கள் அனைத்தும் சிறப்பாக நடந்து முடிந்த பின்னர், கோவிலின் முன்பு பக்தர்கள் வரிசையாக அமர்ந்தனர். கோவில் பூசாரி கோவிந்தா கோவிந்தா என்று கூறி பக்தர்களின் தலையில் தேங்காயை உடைத்து வந்தார்.
அதன் பின்னர், பக்தர்கள் சாட்டை அடி வாங்கி தங்களது நேர்த்திக் கடன்களை செலுத்தினர். தொடர்ந்து, குழந்தைகளுக்கு காது குத்துதல், மொட்டை அடித்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. பந்தல் போட்டு கோவிலுக்கு வந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
தேங்காய் உடைத்து, சாட்டை அடி வாங்கி நேர்த்திக்கடன் செலுத்தும் வினோத வழிபாட்டு முறையை காணுவதற்கு இந்த கோவிலில் நிறைய பக்தர்கள் கூடினர். இதில் அக்கம் பக்கத்தில் இருந்த பல்வேறு ஊர்களைச் சேர்ந்த பொதுமக்களும் கலந்து கொண்டனர்.