கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக சந்திரகாந்த் பண்டிட் நியமனம்

கொல்கத்தா,

ஐபிஎல் கிரிக்கெட் தொடர்களில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மற்றும் ஜூஹி சாவ்லா ஆகியோர் இந்த அணியின் உரிமையாளர்களாக உள்ளனர். கடந்த ஏப்ரல்-மே மாதம் நடைபெற்ற 15-வது ஐபிஎல் சீசனில் கொல்கத்தா அணி முதல் சுற்றோடு வெளியேறி இருந்தது. அதற்கு முந்தைய சீசனில் இரண்டாம் இடம் பிடித்திருந்தது அந்த அணி.

இந்த சூழலில் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் பயிற்சியாளராக மெக்குல்லம் நியமிக்கப்பட்டதையடுத்து கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து அவர் விலகினார்.

இந்நிலையில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக சந்திரகாந்த் பண்டிட் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான அறிவிப்பை அந்த அணி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான அவர் டொமஸ்டிக் கிரிக்கெட்டில் வழிநடத்தும் அணிகள்தான் பெரும்பாலும் சாம்பியன் பட்டம் வெல்கின்றன. கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் மத்தியப் பிரதேசம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பையை வென்று, போட்டியின் 87 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக சாம்பியன் ஆனது.

41 முறை ரஞ்சி சாம்பியனான மும்பையை வீழ்த்தி வெற்றிக் கோப்பையை மத்தியப் பிரதேச அணி வெல்ல பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டிட் முக்கியக் காரணம் ஆவார். இதுவரையில் மும்பைக்கு 3, விதர்பாவுக்கு 2, மத்திய பிரதேசத்திற்கு 1 என ஆறு ரஞ்சிக் கோப்பைகளை தான் பயிற்சி கொடுத்த அணியை வெல்லச் செய்துள்ளார்.

கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் புதிய பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டிட் கூட்டணியை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் என கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் தலைமைச் செயல் அதிகாரி வெங்கி மைசூர் தெரிவித்தார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.