டெல்லியில் மோடியுடன் சந்திப்பு: ஸ்டாலின் கொடுத்த தமிழக மரபு தானியங்கள் எவை?

டெல்லி சென்ற தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் ஆகியோரை சந்தித்த போது, அவர்களுக்கு தமிழகத்தில் உள்ள மரபு தானியங்களின் தொகுப்பு அடங்கிய பெட்டகத்தை வழங்கியுள்ளார்.

இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் ஆகியோரை சந்தித்த போது முதல்வர் மு.க. ஸ்டாலின் வித்தியாசமாக, தமிழகதின் மரபு தானியங்களின் தொகுப்பு பெட்டகத்தை அளித்திருப்பது கவனம் பெற்றுள்ளது. இதனால், மு.க. ஸ்டாலின் என்னென்ன தமிழக மரபு தானியங்களைக் கொடுத்தார் என்று தெரிந்துகொள்ளும் ஆவல் சமூக ஊடகங்களில் பலரிடமும் எழுந்துள்ளது.

இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் ஆகியோரை சந்தித்த போது அளித்த தமிழக மரபு தானியங்கள் எவை என்பது குறித்து விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (17.08.2022) புது டெல்லியில், இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்திய குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் ஆகியோரை சந்தித்தபோது தமிழகத்திலுள்ள மரபு தானியங்கள் தொகுப்பு அடங்கிய பெட்டகத்தை வழங்கினார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து, 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தமைக்காக நன்றி தெரிவித்து, தமிழகத்தின் பாரம்பரிய தானியங்கள் அடங்கிய பெட்டகத்தை வழங்கினார்.

தமிழகத்து மரபு தானியங்களின் தொகுப்பு

ஓடி ஓயாது உழைக்கும் விளிம்பு நிலை மனிதனின் வயிற்றுப் பசியையும் மரத்தின் விளிம்பில் நின்றுகொண்டு காடு வளர்க்கும் பணி செய்யும் பறவையின் பசியையும் ஆற்றிய நிலம். 100க்கும் மேற்பட்ட அரிசி வகைகளாலும் பல வகை சிறுதானியங்களாலும் நிறைந்தது தமிழ் நிலம்.

இந்நிலத்தின் முக்கிய மரபு தானியங்கள்

*மாப்பிள்ளை சம்பா (RED RICE) – சிவப்பு நிறத்தால் ஆண்ட்டி ஆக்சிடண்ட் தன்மையைக் கொடுத்து நோயின்றி காக்கும் அரிசி.

*குள்ளக்கார் (RICE FOR ANTI & POST-NATAL WOMEN) – பாலூட்டும் பெண்களுக்கும் கருத்தரிக்கும் பெண்களுக்கும் ஊட்டம் தரும் அரிசி.

*கருப்புக்கவுனி (EMPEROR OR FORBIDDEN RICE) – நெடுங்காலம் அரசர்களுக்கு மட்டும் பயிரிடப்பட ஆந்தோசயனன் நிறைந்த புற்றைத் தடுக்கும் கருப்பு அரிசி.

*சீரகச் சம்பா (AROMA RICE OF ARCOT) பாலாற்றங்கரையில் பயிராகும் தனித்துவ மணம் கொண்ட சுவைமிக்க அரிசி.

*குடவாழை (RED RICE OF DELTA) – தோலுக்கு பொலிவு அளிக்கும் மரபு சிவப்பு அரிசி இது.

அருந்தானியங்கள்

*கம்பு (PEARL MILLET) – அருந்தானியங்களின் அரசன் இவன். அரிசியைவிட 8 மடங்கு அதிக இருப்புச்சத்து கொண்ட சர்க்கரை நோயாளிகளின் லோ கிளைசிமிக் அரிசி.

*வரகு (KODO MILLET) – தமிழ் மூதாட்டி அவ்வை விரும்பிக் கேட்டு உண்ட மெல்ல சர்க்கரை தரும் மரபு தானியம்.

*சாமை (SMALL MILLET) – பழங்குடி மக்கள் பயிராக்கி படைத்திடும் மருத்துவ குணமிக்க சிறுதானியம்.

*தினை (FOXTAIL MILLET) – கண்ணுக்கும் குழந்தைக்கும் நலம் தரும் பொன்னிற தானியம்.

*கேழ்வரகு (FINGER MILLET) – இரும்பும் கால்சியமும் நிறைந்த தாய்ப்பாலுக்கு அடுத்ததாக தரப்பட வேண்டிய முதல் திட உணவு.

ஆகிய தமிழகத்தின் மரபு தானியங்களின் தொகுப்பு அடங்கிய பெட்டகத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருக்கு அளித்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.