எங்கே அந்த சமூக விரோதிகள்? உயிரை துளைத்த அதிகாரம்… மூச்சை நிறுத்திய தூத்துக்குடி!

“அழிக்கும் நச்சு ஆலை… நம் மண்ணை விட்டு ஓடும் நாளை…,

மானமிகு தமிழனே! வீதிக்கு வந்து போராடு…

முத்து குழிக்கும் நகரா? சாவு குவியும் நகரா..?

புற்றுநோய், புற்றுநோய் ஊரெங்கும் புற்றுநோய்…

ஆலையை மூடி விடு, மக்களை வாழ விடு…

அறவழியில் மக்கள்… திமிரோடு ஆலை… துணைபோகும் அதிகாரம்…”

மே 22, 2018 அன்று மேற்குறிப்பிட்ட பதாகைகளை ஏந்தி, தங்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் முழக்கமாக ஒலிக்க ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான 100வது நாள் போராட்டத்தை தூத்துக்குடி மக்கள் முன்னெடுத்தனர். ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கிறது என்றும், புற்றுநோய் உள்ளிட்ட மோசமான பாதிப்புகள் ஏற்படுகின்றன என்றும் குற்றம்சாட்டினர். தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட புறப்பட்டனர்.

இந்த போராட்டத்தை அடக்கி ஒடுக்க காவல்துறை கையிலெடுத்த விஷயம், அவர்களின் வாழ்க்கையையே புரட்டி போட்டுவிட்டது. போராட்டக்காரர்களை நோக்கி துப்பாக்கிகளை குறிவைத்துள்ளனர். அடுத்த சில மணி நேரங்கள் குண்டு மழை பொழிந்து நகரம் ரத்தக் காடானது. எங்கு பார்த்தாலும் மக்களின் அலறல் சத்தம். பள்ளிச் சிறுமி உள்ளிட்ட 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்கள் அனைவருமே அப்பாவி மக்கள் மட்டுமே. சமூக விரோதிகள் கிடையாது.

ஆனால் நேரில் பார்வையிட வந்த சில தலைவர்கள், சமூக விரோதிகள் ஊடுருவியதால் தான் வன்முறை வெடித்தது என்றும், அதனால் தான் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும் விளக்கம் கொடுத்தனர். ஆனால் உண்மை என்னவென்று அறிய ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. அவர்கள் 3 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர் விசாரணை நடத்தி இறுதி அறிக்கையை தயார் செய்திருக்கின்றனர். இதை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அளித்துள்ளனர்.

அதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. அறிக்கையின் எல்லா இடங்களிலும் போலீசாரே விதிகளை மீறி செயல்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மறைந்திருந்து சுட்டது, தொலைவில் இருந்து சுடக்கூடிய துப்பாக்கிகளை பயன்படுத்தியது, கலைந்து ஓடியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது, 6 பேரை பின்னந்தலையை குறிவைத்து சுட்டது, ஒரேவொரு போலீஸ்காரர் மட்டும் 17 ரவுண்ட்கள் சுட்டது, ஒரே போலீசை நான்கு இடங்களுக்கு அனுப்பி சுட வைத்தது என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

இதன்மூலம் சமூக விரோதிகள் ஊடுருவல் என்ற குற்றச்சாட்டு அடிபட்டு போகிறது. அப்படி சமூக விரோதிகள் ஊடுருவி இருந்தால் விசாரணை அறிக்கையில் தெளிவாக இடம்பெற்றிருக்கும். துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கு காவல்துறைக்கும் ஒரு நியாயம் கிடைத்திருக்கும். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரே மிக அலட்சியமாக நடந்து கொண்டதாக விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ள நிலையில், போலீசாரை மட்டும் குற்றம்சாட்டி என்ன பயன்? ஒட்டுமொத்த அதிகாரமும் அன்றைய தினம் பொதுமக்களுக்கு எதிராக நின்றிருக்கிறது.

மக்கள் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள், மக்களுக்கு சேவையாற்ற, அவர்களது வரிப்பணத்தில் சம்பளம் பெறும் அரசு அதிகாரிகள், போலீசார் என அனைவரும் யாருக்காக வேலை செய்கிறோம் என்பதையும் மறந்திருக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக அதிகாரம் குண்டுகளை பாய்ச்சி உரிமைக்கான குரலை வீழ்த்தியிருக்கிறது. ஆனால் இதை எளிதில் கடந்து செல்ல முடியாது. நீதி கிடைக்க வேண்டும். கீழ்மட்டத்தில் இருந்து அதிகாரத்தின் உச்சத்தில் இருப்பவர்கள் வரை தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் தங்கள் பொறுப்பை மறந்து செயல்பட்ட அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என்ற குரல் தற்போது பலமாக ஒலிக்கத் தொடங்கியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.