பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தி விழா 22ல் துவக்கம்: 31ம் தேதி தீர்த்தவாரி உற்சவம்

திருப்புத்தூர்: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி பெருவிழா வரும் 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற கற்பக விநாயகர் கோயில் உள்ளது. வரும் 31ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இக்கோயிலில் வரும் 22ம் தேதி காலை கொடியேற்றத்துடன் சதுர்த்தி பெருவிழா துவங்குகிறது. அன்று இரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர் எழுந்தருளி திருவீதி உலா நடைபெறும். 2ம் நாள் முதல் 8ம் திருநாள் வரை தினந்தோறும் காலையில் சுவாமி வெள்ளி கேடகத்தில் எழுந்தருளி திருவீதி உலா வருவார்.

ஆக.30ம் தேதி காலை திருத்தேருக்கு கற்பக விநாயகர் சுவாமி எழுந்தருளல் நடைபெறும்.மாலை 4.30 மணி முதல் இரவு 10 மணி வரை வருடம் ஒருமுறை மட்டும் நடைபெறும் சந்தன காப்பு சிறப்பு அலங்காரத்தில் மூலவர் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். மாலை 4 மணியவில் பக்தர்கள் வடம் பிடிக்க தேரோட்டம் நடைபெறும். ஆக.31ம் தேதி காலை கோயில் குளத்தில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும். மதியம் உச்சிகால பூஜையில் மூலவருக்கு ராட்சத கொழுக்கட்டை படைக்கப்பட்டு சிறப்பு தீபாரதனை நடைபெறுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.