மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத் உடல் நல்லடக்கம்| Dinamalar

லண்டன், :மறைந்த பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல், வெஸ்ட் மினிஸ்டர் ஹாலில் இருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, வெஸ்ட்மினிஸ்டர் அபேவில் முழு அரசு மரியாதையுடன் இறுதி சடங்குகள் நடத்தப்பட்டன. பின், விண்ட்ஸர் அரண்மனையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தில், உள்ள அவரது கணவர் இளவரசர் பிலிப் மற்றும் பெற்றோரது கல்லறைகளுக்கு அருகே அடக்கம் செய்யப்பட்டது.’கோஹினுார்’ வைரம்ஐரோப்பிய நாடான பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத், 96, ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் அரண்மனையில் கடந்த 8ம் தேதி காலமானார்.

அவரது உடல் ஸ்காட்லாந்தில் இருந்து விமானம் வாயிலாக எடுத்து வரப்பட்டு, ராணி வாழ்ந்த பக்கிங்ஹாம் அரண்மனையில் வைக்கப்பட்டது.அப்போது, அரச குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டும் ராணியின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பின்னர், பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, பிரிட்டன் பார்லிமென்ட் வளாகத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க வெஸ்ட்மினிஸ்டர் ஹாலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராணியின் உடல் கடந்த 14ல் வைக்கப்பட்டது. நேற்று காலை வரை பொது மக்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டனர்.
பின்னர், உள்ளூர் நேரப்படி நேற்று காலை 11:00 மணிக்கு ராணியின் உடல் வைக்கப்பட்டு இருந்த சவப்பெட்டி, வெஸ்ட்மினிஸ்டர் ஹாலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டது. அப்போது, பிரிட்டன் மக்கள் இரண்டு நிமிட மவுன அஞ்சலி செலுத்தி ராணிக்கு தங்கள் இறுதி மரியாதையை செலுத்தினர். ‘காட் சேவ் தி கிங்’ என்ற பிரிட்டனின் தேசிய கீதம் ஒலித்தது. ராணியின் உடல் மீது அரச குடும்பத்து கொடி போர்த்தப்பட்டு, அவரது அரண்மனையில் இருந்து பறிக்கப்பட்ட மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. சவப்பெட்டி மீது, ‘கோஹினுார்’ வைரம் பொறிக்கப்பட்ட ராணியின் கிரீடம் மற்றும் அவரது பதவி ஏற்பின் போது அளிக்கப்பட்ட செங்கோல் ஆகியவை வைக்கப்பட்டு இருந்தன.

latest tamil news

ஊர்வலத்தில் மன்னர் மூன்றாம் சார்லஸ் அவரது மகன்கள் இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹாரி ஆகியோர் ராணியின் உடலை பின் தொடர்ந்து சென்றனர். இளவரசர் வில்லியம்சின் மகன்கள் இளவரசர் ஜார்ஜ், 9, இளவரசர் சார்லட், 7, ஆகியோரும் ஊர்வலத்தில் பங்கேற்றனர். 6,000 ராணுவ வீரர்கள் புடைசூழ, ராணியின் உடல் அடங்கிய சவப்பெட்டி ஆயுதங்கள் தாங்கி செல்லும் வாகனத்தில் லண்டன் வீதிகளில் ஊர்வலமாக சென்றது.அரசு மரியாதைஅப்போது, லண்டனின் பிரதான அடையாளமாக திகழும் எலிசபெத் டவரில் உள்ள, ‘தி பிக் பென்’ என்ற பிரமாண்ட மணி, ராணியின் ஆயுளை குறிப்பிடும் விதமாக நிமிடத்துக்கு 96 முறை ஒலித்தது. ராணியின் உடல், 11ம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட வெஸ்ட்மினிஸ்டர் அபேவுக்கு எடுத்து செல்லப்பட்டு அங்கு அரச குடும்பத்தினர், சர்வதேச தலைவர்கள், பொது மக்கள் முன்னிலையில் முழு அரசு மரியாதையுடன் இறுதி சடங்குகள் நடந்தன.

இந்த நிகழ்வில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட 2,000க்கும் மேற்பட்ட சர்வதேச தலைவர்கள் பங்கேற்றனர். நம் நாட்டின் சார்பில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, வெளியுறவுத்துறை செயலர் வினய் க்வாத்ரா ஆகியோர் பங்கேற்றனர். வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இறுதி சடங்குகள் முடிந்தபின் வெஸ்ட்மினிஸ்டர் அபேவில் இருந்து புறப்பட்ட ராணியின் உடல், அருகில் உள்ள விண்ட்ஸர் அரண்மனையின் செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு, ராணியின் கணவர் இளவரசர் பிலிப் மற்றும் பெற்றோர் கல்லறைகளுக்கு அருகே ராணியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த நிகழ்வில், அரச குடும்பத்தினர் தவிர வேறு நபர்கள்அனுமதிக்கப்படவில்லை.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.