ஆம்புலன்ஸ் செல்ல கான்வாயை நிறுத்திய பிரதமர் மோடி – குவியும் பாராட்டு!

குஜராத் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஆம்புலன்ஸ் வாகனம் செல்வதற்காக, தனது கான்வாயை நிறுத்திய சம்பவத்திற்கு சமூக வலைதளங்களில் பாராட்டு குவிகிறது.

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாட்கள் பயணமாக தனது சொந்த மாநிலமான குஜராத்துக்கு நேற்று வந்தார். அகமதாபாத்தில் நேற்று 36-வது தேசிய விளையாட்டு போட்டியை அவர் தொடங்கி வைத்தார். இந்நிலையில் இரண்டாவது நாளான இன்று, காந்தி நகர் – மும்பை சென்ட்ரல் இடையேயான புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் கூடிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி கொடி அசைத்து தொடக்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து, காந்தி நகரில் இருந்து அகமதாபாத்துக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் பிரதமர் நரேந்திர மோடி பயணம் செய்தார். முன்னதாக, இன்றைய நிகழ்ச்சிகளில் பங்கேற்க, காந்தி நகரில் இருந்து அகமதாபத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி, தனது பாதுகாப்பு வாகனங்களுடன் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, காந்தி நகர் – அகமதாபாத் சாலையில் ஆம்புலன்ஸ் ஒன்று அவசர அவசரமாக வருவதை அவர் கண்டார். இதை அடுத்து உடனடியாக, தனது பாதுகாப்பு அதிகாரிகளிடம், பாதுகாப்பு வாகனங்களை ஓரமாக நிறுத்தி ஆம்புலன்ஸ் செல்ல வழிவிடுமாறு உத்தரவிட்டார். ஆம்புலன்ஸ் சென்ற பிறகு பிரதமர் நரேந்திர மோடியின் கான்வாய் சென்றது.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதை அடுத்து, பிரதமர் நரேந்திர மோடி சாலை விதிகளை கடைபிடிப்பதில் முன்மாதிரியாக திகழ்கிறார் என, அவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ள குஜராத் மாநில பாஜக நிர்வாகி ருத்விஜ் படேல், “மோடி ஆட்சியில் விஐபி கலாசாரத்திற்கு இடமில்லை,” என தெரிவித்து உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.