வேலூரில் மீண்டும் பரபரப்பு; சாலையோரம் பறக்கவிடப்பட்ட ரூ.14 லட்சம் கள்ள நோட்டுகள் போட்டிப்போட்டு சேகரித்த மக்கள்; போலீஸ் கைப்பற்றியது

வேலூர்: வேலூர் அடுத்த  பள்ளிகொண்டாவில் தேசிய நெடுஞ்சாலையோரம் கார் ஒன்றில் இருந்து 4 பேர் கொண்ட கும்பல் ரூ.14.70 கோடி நோட்டு கட்டுகள் கொண்ட 30 பண்டல்களை லாரியில் ஏற்றியபோது பிடிபட்டனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மீண்டும் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது. வேலூர் கொணவட்டம் தேசிய நெடுஞ்சாலையோரம் சர்வீஸ் சாலையில் நேற்று காலை பொதுமக்கள் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது தேசிய நெடுஞ்சாலையில் காரில் சென்ற ஒருவர் திடீரென 500 ரூபாய் நோட்டு கட்டுகளை சர்வீஸ் சாலையோரம் வீசியபடி சென்றார். அவ்வழியாக சென்றவர்கள் அவற்றை எடுத்து பார்த்தனர். அவை புதிய ரூ. 500 நோட்டுகளாக இருந்தது.

கைக்கு கிடைத்த வரை லாபம் என்று போட்டிபோட்டு சேகரித்தனர். தகவலறிந்து வடக்கு போலீசார் வந்து ரூபாய் நோட்டுகளை பார்த்தபோது அவை கள்ளநோட்டுகள் என தெரியவந்தது. இதனை அங்கிருந்தவர்களிடம் கூறினர். இதனால் ஏமாற்றமடைந்தவர்கள், தாங்கள் சேகரித்த நோட்டுகளை போலீசாரிடம் கொடுத்துவிட்டு சென்றனர். இதில் ரூ.14.50 லட்சம் கள்ள நோட்டுகள் சிக்கின. வாகன சோதனையில் போலீசாரிடம் சிக்கிவிடுவோம் என்ற பயத்தில் கள்ள நோட்டு கும்பல் சாலையோரம் கள்ளநோட்டுகளை வீசிச்சென்றிருக்கலாம் என்று தெரிகிறது. அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.