மோடியை வீழ்த்த சூறாவளி சுற்றுப் பயணம் ரூ.100 கோடியில் தனி விமானம் வாங்குகிறார் சந்திரசேகர ராவ்: 3வது அணியை உருவாக்க ஏற்பாடு

திருமலை: மக்களவை தேர்தலில் பாஜ.வுக்கு எதிரான அணியை உருவாக்க முயன்று வரும் தெலங்கானா முதல்வர் சந்திர சேகரராவ், இதற்காக நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள ரூ.100 கோடியில் விமானம் வாங்குகிறார். தெலங்கானாவில் ஆட்சி செய்து வரும் முதல்வர் சந்திரசேகர ராவ், ‘தெலங்கானா ராஷ்டிரிய சமிதி’ (டிஆர்எஸ்) என்ற தனது மாநில கட்சியை சமீபத்தில், ‘பாரத் ராஷ்டிரிய சமிதி’ (பிஆர்எஸ்’ என்று பெயர் மாற்றம் செய்து, தேசிய கட்சியாக மாற்றினார்.

2024 மக்களவை தேர்தலில் பாஜ.வை தோற்கடிக்கவும், தேசிய அரசியலில் தனக்கு தனி செல்வாக்கை ஏற்படுத்தவும் அவர் திட்டமிட்டு உள்ளார். இதற்காக, பல்வேறு மாநில கட்சிகளை ஒருங்கிணைத்து 3வது அணியை உருவாக்கும்  முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதற்காக, தனது பயணங்களை சிரமமின்றி மேற்கொள்ள சொந்தமாக தனி விமானம் வாங்க முடிவு செய்துள்ளார். இதற்காக, 2 மாதங்களுக்கு முன்பே ரூ.100 கோடியில் புதிய சிறப்பு விமானம் வாங்குவதற்கு ஆர்டர் கொடுத்துள்ளார்.

தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சிக்கு ரூ.865 கோடிக்கு மேல் கட்சி நிதி உள்ள நிலையில் தற்போதைய அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் தொழிலதிபர்கள் என பல தரப்பினரின் நன்கொடைகள் மூலம் இந்த விமானம் வாங்கப்பட உள்ளது. தெலங்கானாவில் தொடர் சுற்றுப்பயணத்துக்கு இதுவரை சந்திரசேகர ராவ் ஹெலிகாப்டரை பயன்படுத்தி வருகிறார். தற்போது, தேசிய அரசியலில் அடியெடுத்து வைப்பதால் தனி விமானத்தை வாங்குகிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.