கைமாறிய கடிதம்… சபாநாயகரை சந்தித்த எடப்பாடி- அடுத்து நடக்கப் போகும் மாற்றம்?

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. மறைந்த தலைவர்களுக்கு முதல் நாளில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. பின்னர் அவை ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து நடந்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் சட்டப்பேரவையை எத்தனை நாட்கள் நடத்துவது என ஆலோசிக்கப்பட்டது. அதன்படி வரும் 20ஆம் தேதி வரை மூன்று நாட்கள் மட்டும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை யாருக்கு? என்ற கேள்விக்கு விடை தெரியாமல் இருந்தது. அதற்கு அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் தொடர்பான பட்டியலில் சபாநாயகர் அப்பாவு பதிலளித்திருந்தார். அதன்படி, ஓ.பன்னீர்செல்வத்தின் இருக்கையில் மாற்றம் இல்லை என்றும், எடப்பாடி தரப்பின் கோரிக்கை ஏற்கப்படவில்லை என்று தெரியவந்தது. இதனால் முதல் நாள் சட்டப்பேரவை கூட்டத்தை

தரப்பினர் புறக்கணித்தனர்.

அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் எஸ்.பி.வேலுமணி மட்டும் பங்கேற்றார். ஓபிஎஸ் தரப்பில் இருந்து யாரும் பங்கேற்கவில்லை. இந்த கூட்டத்தில் எடுக்கும் முடிவை ஏற்பதாக ஓபிஎஸ் முன்கூட்டியே அறிவித்துவிட்டார். இதையடுத்து கூட்டத்தொடர் முழுவதும் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை யாருக்கு? என சபாநாயகர் முடிவு செய்து அறிவிக்கட்டும். அதன்பிறகு சட்டப்பேரவைக்கு வருவது பற்றி முடிவு செய்யப்படும் என எடப்பாடி தரப்பு தெரிவித்தது.

இந்நிலையில் இன்றைய தினம் இரண்டாவது நாளாக சட்டப்பேரவை கூடுகிறது. கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக சபாநாயகர் அப்பாவு அவர்களை எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் நேரில் சந்தித்து பேசினர். அப்போது எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஓ.பன்னீர்செல்வத்தை அங்கீகரிக்க வேண்டாம் என்றும், ஆர்.பி.உதயகுமார் நியமிக்கப்பட்டதை ஏற்க வேண்டும் என்றும் கோரிக்கை கடிதம் ஒன்றை அளித்துள்ளதாக தெரிகிறது.

அப்போது எடப்பாடி தரப்பை சேர்ந்த கே.பி.முனுசாமி, அன்பழகன், செல்லூர் ராஜு உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் எம்.எல்.ஏக்கள் உடனிருந்தனர். அதிமுக உட்கட்சி பூசல் விவகாரம் ஏற்கனவே நீதிமன்றம் வரை சென்றுள்ளது. கட்சியின் பொதுச் செயலாளர் தேர்தல் நடத்தக்கூடாது என்று இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் ஆணையமும் அதிமுக யார் கையில்? என்ற விஷயத்தில் இறுதி முடிவு எடுக்கவில்லை.

அப்படியிருக்கையில் எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை எடப்பாடி பழனிசாமி நியமித்தது செல்லுபடியாகுமா? நீதிமன்ற தீர்ப்பு வருவதற்கு முன்பாக எடப்பாடி தரப்பிற்கு சாதகமாக சபாநாயகர் அப்பாவு முடிவெடுக்க வாய்ப்புள்ளதா? இல்லையெனில் கோரிக்கை நிராகரிக்கப்படுமா? எனப் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. இதற்கான விடை இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தில் தெரிந்து விடும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.