ஹேப்பி நியூஸ்… நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தீபாவளி பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படவிருக்கிறது. இதனையொட்டி சென்னையிலிருந்து பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றிருக்கின்றனர். அங்கு அவர்கள் புத்தாடை உடுத்தி, பட்டாசு வெடித்து, கடவுளை வழிபட்டு தங்களது பண்டிகை கொண்டாட்டத்தை ஆரம்பித்திருக்கின்றனர். அதேசமயம், தீபாவளிவரைவிடப்பட்டிருந்த விடுமுறை நாளையும் (செவ்வாய் கிழமை) நீடிக்குமா என்ற கேள்வியும், தீபாவளிக்கு மறுநாளே பள்ளிகள் திறந்தால் மாணவர், மாணவிகள் சிரமப்படுவார்கள். எனவே அன்றைய தினம் விடுமுறை விடவேண்டுமென்ற கோரிக்கையும் எழுந்தது.

இந்நிலையில் பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை விடப்படுமென்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், “இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை கொண்டாடும் பொருட்டு சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஏதுவாக அக்டோபர் 25ஆம் தேதி ஒரு நாள் மட்டும், தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகள். கல்லூரிகள் மற்றும் அனைத்துக்கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.மேலும் அந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் நவம்பர் 19 அன்று பணி நாளாக அனுசரிக்கப்படும்” என குறிப்பிட்டுள்ளது.

இதனால் மாணவர்களும், மாணவிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். முன்னதாக கடந்த 22ஆம் தேதி பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் தீபாவளி பண்டிகைக்கு அடுத்தநாளான செவ்வாய் கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். 

அதற்கு பதிலளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “தீபாவளிக்கு மறுநாள் செவ்வாய் கிழமையும் சேர்த்து விடுமுறை அளிப்பது குறித்து பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். இந்த விடுமுறையானது பள்ளி கல்வித் துறைக்கு மட்டுமின்றி தமிழ்நாடு அரசின் அனைத்து துறைகளுக்கும் பொருந்தும். 

எனவே இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் முடிவெடுத்து அறிவிப்பார். செவ்வாய் கிழமை விடுமுறை குறித்து கோரிக்கையாக வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முதல்வர் அலுவலகத்தில் கலந்து ஆலோசித்து முடிவு அறிவிக்கப்படும்” என்று தெரிவித்திருந்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.