ட்விட்டர் நிறுவனத்தை கையகப்படுத்தும் பணி நாளைக்குள் முடிவுக்கு வந்துவிடும் என எலான் மஸ்க் அவரது துணை முதலீட்டாளர்களிடம் தெரிவித்துள்ளதாக, செய்திகள் வெளியாகி உள்ள நிலையில் ட்விட்டர் அலுவலகத்திற்குள் கை கழுவும் தொடியுடன் தான் நுழையும் வீடியோவை அவர் பகிர்ந்துள்ளார்.அது மட்டுமல்லாது தனது ட்விட்டர் ப்ரொஃபைல் ஹேண்டிலில் தலைமை ட்விட் என்றும் மாற்றியுள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் ட்விட்டர் சமூக வலைதளத்தில் பயனர்களின் கருத்து சுதந்திரம் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார் மஸ்க். தொடர்ந்து அந்நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை வாங்கியிருப்பதாக மஸ்க் தெரிவித்திருந்தார். அத்துடன் ட்விட்டரில் எடிட் பட்டன் குறித்தும் அவர் பேசியிருந்தார். அதன் பின்னரே ட்விட்டர் நிறுவனத்தின் ஒரு பங்கை 54.20 அமெரிக்க டாலர்களுக்கு வாங்க முன்வந்தார் மஸ்க்.எனினும் கருத்து வேறுபாடு மற்றும் சட்ட சிக்கல் தொடர்பாக ட்விட்டரை வாங்குவதில் ட்விட்டர் நிறுவனம் மற்றும் மஸ்க் தரப்பில் பேச்சுவார்த்தை தொடர்ந்து இழுபறியில் இருந்தது.
இந்நிலையில், ட்விட்டர் நிறுவனத்தை கையகப்படுத்தும் பணி நாளைக்குள் முடிவுக்கு வந்துவிடும் என எலான் மஸ்க் அவரது துணை முதலீட்டாளர்களிடம் தெரிவித்துள்ளதாக, செய்திகள் வெளியாகி உள்ளன. இந்தச் சூழலில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதவி பெயரை மாற்றியதோடு வெளியிட்டுள்ள வீடியோவிற்கு ‘நான் ட்விட்டர் தலைமையகத்திற்குள் நுழைகிறேன். அது மூழ்கட்டும்’ என்று தலைப்பிட்டுள்ளார். கைகழுவும் தொட்டியை ஏந்திச் செல்கிறார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Entering Twitter HQ – let that sink in! pic.twitter.com/D68z4K2wq7
— Elon Musk (@elonmusk) October 26, 2022
75% ஊழியர்கள் பணி நீக்கமா? இதற்கிடையில் எலான் மஸ்க் வசம் ட்விட்டர் சென்றவுடன் அவர் 75% ஊழியர்களை பணி நீக்கம் செய்வார் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால் அப்படி எந்த ஒரு திட்டமும் இல்லை என்று ட்விட்டர் ஊழியர்களுக்கு எலான் மஸ்க்கே விளக்கமளித்துள்ளார். ஆனாலும் ட்விட்டரை கையகப்படுத்திய பின்னர் சீர்திருத்த நடவடிக்கைகள் என்ற பெயரில் நிச்சயமாக மஸ்க் பணி நீக்க நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்பதால் ஊழியர்கள் அழுத்தத்தில் உள்ளனர்.