பீகாரில் கூட்டணி ஆட்சி மாறியதிலிருந்து முதல்வர் நிதிஷ் குமாரை ஒருபக்கம் பா.ஜ.க சாடிவர, மறுபக்கம் பிரசாந்த் கிஷோரும், நிதிஷ் குமாரும் ஒருவரையொருவர் விமர்சித்து வருகின்றனர். இதனால் இவர்களுக்கிடையே வார்த்தைப் போர் நீண்டு வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு கூட, `நிதிஷ் குமார் இன்னும் பா.ஜ.க-வுடன் தொடர்பில் தான் இருக்கிறார் என பிரசாந்த் கிஷோர் குற்றம்சாட்ட, `அவரைப்பற்றி என்னிடம் எதுவும் கேட்காதீர்கள்’ என பத்திரிகையாளர்கள் முன்னிலையில் பேசினார் நிதிஷ் குமார்.
இந்த நிலையில், பிரசாந்த் கிஷோர் தற்போது, முதல்வர் மீது காலணி வீசப்பட்டதால் 15 ஆண்டுகளாக கிராமத்தில் சாலை அமைக்கப்படவில்லை என நிதிஷ் குமார் மீது புதிய குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார்.
`ஜன் சுராஜ்’ பிரசாரத்தின் ஒருபகுதியாக மேற்கு சம்பாரண் மாவட்டத்தின் ஜோகப்பட்டி கிராம மக்களுடன் உரையாடிய பிரசாந்த் கிஷோர், “பெட்டியா நகரம் இங்கிருந்து 32 கிலோமீட்டருக்கு அப்பால் தொலைவிலிருக்கிறது. இதற்கிடையில் இருக்கும் மண்பாதை, ஆஸ்துமா தாக்குதலுக்கு ஆளாக நேரிடும் பயணிகளுக்கு வெறும் கனவாகவே இருக்கிறது.
15 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு யாரோ ஒருவர் முதல்வர் மீது காலணி வீசியதால் சாலை அமைக்கப்படவில்லை என்று என்னிடம் கூறப்பட்டது. குற்றவாளி யாரென்று இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் முழு பகுதியும் தண்டிக்கப்படுகிறது” என நிதிஷ்குமாரை விமர்சித்துப் பேசினார்.
பின்னர் இதற்குப் பதிலடி தரும் விதமாக, ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் அஃபாக் அகமது, “இதுவரை முதல்வர் பதவிக் காலத்தில் சாலை கட்டுமானத் துறையின் பெரும்பகுதியை வகித்த பா.ஜ.க-வுக்கு எதிராகப் பேசுவதில் பிரசாந்த் கிஷோர் ஏன் இவ்வளவு எச்சரிக்கையாக இருக்கிறார்” எனக் கேள்வியெழுப்பியிருக்கிறார்.