வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய வட இலங்கைப் பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக, புதுவை கடற்கரையை நோக்கி நகரக்கூடும். மேலும், அடுத்த இரண்டு தினங்களில் தமிழக – கேரளப் பகுதிகளைக் கடந்து செல்லக்கூடும். இதன் காரணமாக, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (11.11.2022) பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன்கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை (12.11.2022) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன்கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும். மேலும் வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு உள்ளிட்ட 16 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்பிருக்கிறது.
13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன்கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன்கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
நாளை (12.11.2022) கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், கடலூர், காஞ்சிபுரம், விழுப்புரம், அரியலூர், திருவாரூர், மயிலாடுதுறை, வேலூர், நீலகிரி, ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, திருச்சி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது.
நாளை, (12.11.2022) மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள், தமிழகக் கடலோரப் பகுதிகள், தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். மேலும் 13.11.2022, குமரிக்கடல் பகுதிகள், லட்சத்தீவு – மாலத்தீவு பகுதிகள், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் கேரள கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும். இந்த நாள்களில் மீனவர்கள் இந்தப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.