கட்டணம் செலுத்துங்கள் இல்லை நில்லுங்கள் – ஏர்போர்ட்டில் ஷாருக்கானை தடுத்த சுங்கத்துறையினர்?

பாலிவுட் சூப்பர் ஸ்டார்களில் ஒருவர் ஷாருக்கான். பாலிவுட் பாஷா எனவும் அழைக்கப்படும் அவருக்கு இந்தியா முழுவதும் பலர் ரசிகர்களாக இருக்கினறனர். அவர் தற்போது அட்லீ இயக்கத்தில் ஜவான் படத்தில் நடித்திருக்கிறார். படத்தில் நயன்தாரா, யோகிபாபு உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். அனிருத் இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் ஷூட்டிங் சென்னையில் நடைபெற்றது. இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக சென்ற ஷாருக்கான் நேற்றிரவு தனி விமானம் மூலம் மும்பை திரும்பினார்.

விமான நிலையம் வந்த ஷாருக்கான் ரூ.18 லட்சம் மதிப்புள்ள  இரண்டு கடிகாரங்கள் உள்ளிட்ட விலை உயர்ந்த சில பொருட்களை வைத்திருந்தாகக் கூறப்படுகிறது. இதனால், ஷாருக்கானை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்திய சுங்கத்துறை அதிகாரிகள் விலை உயர்ந்த பொருட்கள் குறித்து அவரிடம் விசாரணை நடத்தியதாக தெரிகிறது. மேலும், சுங்க வரியாக ரூ. 6.83 லட்சம் கட்டணம் செலுத்தினால்தான் மும்பை விமான நிலையத்தில் இருந்து வெளியேற ஷாருக்கானுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று கூறப்பட்டதாகவும் மும்பை விமான நிலையத்தின் தகவல்கள் கூறுகின்றன. 

தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில் ஷாருக்கான் மற்றும் அவரது மேலாளர் பூஜா தத்லானி ஆகியோர் மும்பை விமான நிலையத்தில் இருந்து வெளியேற அனுமதி அளிக்கப்பட்டாலும் ஷாருக்கானுடன் வந்த மேலும் சிலரை இரவு முழுக்க சுங்கத்துறை அதிகாரிகள் வெளியேற அனுமதி மறுத்துவிட்டதாகவும் விசாரணைக்குப் பிறகு இன்று காலைதான் வெளியே செல்ல அனுமதி அளித்ததாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் சுங்க கட்டணத்தை ஷாருக் செலுத்தினாரா இல்லையா என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் தெரியவரவில்லை.

மும்பை விமான நிலையத்தில் ஷாருக்கான் நிறுத்தப்படுவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே கடந்த 2011ஆம் ஆண்டு அவர் அதிக பொருள்களை எடுத்து சென்றதற்காக அவரை சுங்கத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி அவருக்கு 1.5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.