தமிழகத்தில் கனமழை: முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில்
கனமழை
பெய்து வருகிறது. வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுபெற்றுள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்களில் நேற்று இரவு முழுவதும் பெய்த மழையால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் விடியவிடிய கனமழை பெய்தது. அடுத்து வரும் 3 நாட்களுக்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில், வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால், மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமை செயலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு, வருவாய் நிருவாக ஆணையர், காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு, அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கனமழை காரணமாக அனைத்து மாவட்டங்களில் நடைபெற்று வரும் மீட்புப்பணிகள், நிவாரணப் பணிகள், உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களுக்கு தடையின்றி கிடைப்பதை உறுதி செய்தல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

முன்னதாக, சென்னையில் மேற்கொள்ளப்படும் மழைநீர் வடிகால் பணிகளை நேற்று இரவு முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். திண்டுக்கல் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு மதுரை விமானநிலையத்திலிருந்து சென்னை திரும்பிய முதல்வர் ஸ்டாலின், நேரடியாக களத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.