மனித உரிமை ஆணையத்தின் பரிந்துரையை ஏற்க வேண்டும்: தமிழக அரசுக்கு உத்தரவு!

தேசிய மனித உரிமை ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்றுக் கொள்ள முடியாது என்று மாநில அரசு மறுக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த 2008 ஆம் ஆண்டு சென்னை சட்டக் கல்லூரியில் மாணவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. மாணவர்கள் மோதலை தடுக்காமல் வேடிக்கை பார்த்த காவல் துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேசிய மனித உரிமை ஆணையத்திடம் வழக்கறிஞர் எஸ்.கே.சாமி என்பவர் புகார் அளித்திருந்தார். இந்த புகாரை விசாரித்த தேசிய மனித உரிமை ஆணையம், மாநில மனித உரிமை ஆணையத்திடம் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.

ஆனால் இந்த சம்பவம் தொடர்பாக புகார் அளித்ததற்காக தன் மீது பொய் வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் தன்னை கைது செய்ததாகவும், சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீண்டும் தேசிய மனித உரிமை ஆணையத்திடம் எஸ்.கே.சாமி புகார் அளித்தார்.

இந்த புகாரை விசாரித்த தேசிய மனித உரிமை ஆணையம், ஐபிஎஸ் அதிகாரி அருண் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசின் தலைமை செயலாளருக்கு பரிந்துரைத்தது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், காவல் துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி எஸ்.கே.சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், கே.குமரேஷ்பாபு முன்பு விசாரணை வந்தபோது, தேசிய மனித உரிமை ஆணையத்தின் பரிந்துரையை தமிழக அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும் அல்லது மேல்முறையீடு செய்ய வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், புகார் மீது உரிய நடவடிக்கை எடுத்து அது தொடர்பான அறிக்கையை நவம்பர் 15 ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக தலைமை செயலாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.