நடிகை ஹன்சிகா மௌத்வானி, தொலைக்காட்சி தொடர்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் ஆரம்பத்தில் நடித்து வந்தார். 2011ஆம் ஆண்டில், தனுஷ் நடிப்பில் வெளியான ‘மாப்பிள்ளை’ திரைப்படம் மூலம் அறிமுகமான அவர், அந்த ஆண்டே ஜெயம் ரவியுடன் ‘எங்கேயும் எப்போதும்’, விஜயுடன் ‘வேலாயுதம்’ ஆகிய திரைப்படங்களில் நடித்தார்.
தொடர்ந்து, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘சேட்டை’, ‘தீயா வேலை செய்யனும் குமாரு’ போன்ற காமெடி படங்களிலும் கலக்கினார். சூர்யாவின் பிளாக்பஸ்டர்களில் ஒன்றான ‘சிங்கம் 2’ திரைப்படத்தில் பள்ளி மாணவியாக நடித்திருந்தார். நடிப்பால் பலரை கவர்ந்தது மட்டுமின்றி, செயலாலும் பலரை கவர்ந்தவர் இவர், சில குழந்தைகளை தத்தெடுத்து அவர்களுக்கு வேண்டியதை செய்து வளர்த்தும் வருகிறார்.
அந்த வகையில் அவருக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது என தகவல் பரவிய நிலையில், கடந்த நவ. 2ஆம் தேதி தனது வருங்கால கணவரை உலகிற்கு அறிமுகம் செய்து வைத்தார். பாரிஸ் நகரின் இஃபிள் டவர் அருகே அவரின் வருங்கால கணவரான சோஹேல் கதுரியா ஹன்சிகாவுக்கு பிரபோஸ் செய்யும் புகைப்படத்தை ஹன்சிகாவே தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். தொடர்ந்து, அவர்களுக்கு திருமணம் நிச்சயமாகியுள்ள நிலையில், அடுத்த மாதம் திருமணம் எனவும் தெரிவிக்கப்பட்டது.
ஹன்சிகா – சோஹேல் கதூரியா திருமணம் வரும் டிசம்பர் மாதம் 2ம் தேதி முதல் 4ம் தேதி வரை ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் உள்ள முண்டோடா கோட்டை மற்றும் அரண்மனையில் நடைபெறும் என்று கூறப்படுகிறது. மெஹந்தி மற்றும் சங்கீத் டிசம்பர்-3ம் தேதியும், 4ம் தேதி நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெறும் என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், ஹன்சிகாவின் திருமணத்தின் ஒளிப்பரப்பு உரிமையை பிரபல ஓடிடி நிறுவனம் ஒன்று கைப்பற்றியுள்ளதாகவும், அந்த உரிமை ஹன்சிகா பல கோடிக்கு விற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஓடிடி மற்றும் ஓடிடிக்கு விற்கப்பட்ட தொகை குறித்த உறுதிப்படுத்தப்பட்ட தகவல் ஏதும் வெளியாகவில்லை. அவரின் திருமணம் நேரலையில் ஒளிபரப்பவும் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது பிரபலங்களின் திருமணங்களை படம்பிடித்து, ஓடிடியில் ஒளிபரப்புவது தற்போது வாடிக்கையாகிவிட்டது. அதில், சமீபத்தில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணத்தின் ஒளிபரப்பு உரிமையை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம் வாங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.