ராமஜெயம் கொலை வழக்கில் உண்மை கண்டறியும் சோதனைக்கு மேலும் 4 பேர் ஒப்புதல்

திருச்சி: ராமஜெயம் கொலை வழக்கில், உண்மை கண்டறியும் சோதனைக்கு மேலும் 4 பேர் ஒப்புதல் தெரிவித்துள்ளதால் விசாரணை 21ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. திமுக முதன்மை செயலாளரும், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சருமான கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம், கடந்த 2012 மார்ச் 29ம் தேதி மர்ம நபர்களால் கடத்தி கொலை செய்யப்பட்டார். தற்போது இந்த வழக்கை சிறப்பு புலனாய்வு தனிப்படை எஸ்பி ஜெயக்குமார், டிஎஸ்பி மதன், இன்ஸ்பெக்டர் ஞானவேல் ஆகியோர் அடங்கிய குழுவினர் விசாரித்து வருகின்றனர். சந்தேகத்துக்குரிய 20 ரவுடிகளிடம் தொடர் விசாரணை நடத்தப்பட்டது.

இவர்களில், 13 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த சிறப்பு புலனாய்வு போலீசார் திட்டமிட்டு சம்மன் அனுப்பினர். கடந்த 14ம் தேதி திருச்சி 6வது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சிவகுமார் முன்பு ரவுடிகள் சத்யராஜ், லட்சுமி நாராயணன் உட்பட 8 பேர் உண்மை கண்டறியும் சோதனைக்கு சம்மதம் தெரிவித்தனர். இந்நிலையில், நீதிபதி சிவக்குமார் முன்பு நேற்று ரவுடிகள் திண்டுக்கல் மோகன்ராம், நரைமுடி கணேசன், தினேஷ், கடலூர் லெப்ட் செந்தில் ஆகியோர் வக்கீல்களுடன் ஆஜராகினர். இவர்களும் உண்மை கண்டறியும் சோதனைக்கு சம்மதம் தெரிவித்தனர். தொடர்ந்து, வழக்கு விசாரணையை வரும் 21ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார். நவ.21ம் தேதி 12பேரும் மீண்டும் கோர்ட்டில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.