கேரளாவில் நரபலி கொடுக்கப்பட்ட தர்மபுரி பெண் உடல் மகனிடம் ஒப்படைப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் கொடூரமான முறையில் நரபலி கொடுக்கப்பட்ட  தர்மபுரியை சேர்ந்த பத்மாவின் உடல் 2 மாதங்களுக்கு பிறகு நேற்று  உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. கேரள மாநிலம்,  பத்தனம்திட்டாவில்  தர்மபுரி அருகே உள்ள பென்னாகரத்தை சேர்ந்த பத்மா  மற்றும் கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த ரோஸ்லி ஆகியோர் சில  மாதங்களுக்கு முன், கொடூரமான முறையில் நரபலி கொடுக்கப்பட்டனர். இது தொடர்பாக  எர்ணாகுளத்தை சேர்ந்த போலி மந்திரவாதியான முகம்மது ஷாபி, பத்தனம்திட்டா  மாவட்டம் இலந்தூரை சேர்ந்த நாட்டு வைத்தியர் பகவல் சிங், அவரது மனைவி லைலா  ஆகிய 3 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

ரோஸ்லி கடந்த ஜூன் மாதமும், பத்மா கடந்த செப்டம்பர்  மாதமும் நரபலி கொடுக்கப்பட்டனர். அவரது உடல் பாகங்கள் போலீசாரால் தோண்டி  எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனையும், டிஎன்ஏ பரிசோதனையும் நடந்தன. கூடுதல்  பரிசோதனைக்காக உடல்கள் கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை  பிரேதக் கிடங்கில் வைக்கப்பட்டிருந்தன.
 இதற்கிடையே, தனது தாயின் உடலை  உடனே ஒப்படைக்குமாறு பத்மாவின் மகன் செல்வராஜ் 2 முறை கேரள  முதல்வருக்கு கடிதம் அனுப்பினார்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கும்  கோரிக்கை விடுத்தார். இந்நிலையில், பத்மாவின் உடல் நேற்று காலை அவரது மகனிடம் ஒப்படைக்கப்பட்டது.    உடலை பெற்றுக் கொண்ட அவர்கள் உடனே சொந்த ஊரான தர்மபுரி மாவட்டம்,  பென்னாகரத்துக்கு புறப்பட்டு சென்றனர்.பின்னர், நேற்று மாலை 6.30 மணியளவில், சொந்த ஊரான எரப்பட்டி கிராமத்தில் இறுதி சடங்குகள் செய்யப்பட்டு, உடல் தகனம் செய்யப்பட்டது.

* உடலை கேட்காத உறவினர்கள்
நரபலி  கொடுக்கப்பட்ட இன்னொரு பெண்ணான கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த  ரோஸ்லியின் உடலை போலீசார் இதுவரை அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கவில்லை.  அவரது உறவினர்கள் யாரும் உடலை கேட்டதாகவும் தெரியவில்லை. கூடுதல்  பரிசோதனைக்காக ரோஸ்லியின் உடலை போலீசார் வைத்து இருக்கின்றார்கள். விரைவில்  உடலை உறவினர்களிடம் ஒப்படைத்து விடுவோம் என்று போலீசார் கூறினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.