சிவகாசி: ஒவ்வொரு ரயில் நிலைய பகுதியிலும் ரயில் பாதைகள் சரியாக இருக்கிறதா என சோதனை செய்ய ரயில் பாதை பராமரிப்பு பணியாளர்கள் தினந்தோறும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் நடந்து சென்று ஆய்வு செய்வர்.
இதன்படி, சிவகாசி பகுதி ரயில் பாதை பராமரிப்பு பணியாளர் கருப்பசாமி நவ., 20 பணியில் இருந்தபோது, காலை 6.45 மணிக்கு ரயில் பாதைகளை இணைத்து இருந்த பற்றவைப்பு (வெல்டிங்) விடுபட்டு தண்டவாளங்களில் இடைவெளி இருப்பதை கண்டுபிடித்தார். அந்த நேரத்தில் சிவகாசியில் இருந்து 6 மணிக்கு புறப்பட வேண்டிய சிலம்பு விரைவு ரயில் காலை 6.37 மணிக்கு தாமதமாக புறப்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கி வந்து கொண்டிருந்தது.
சுதாரித்த கருப்பசாமி உடனே ரயில் வரும் திசை நோக்கி ஓடி, சிவப்பு கொடியை காண்பித்து ரயிலை நிறுத்தி விபத்தை தவிர்த்தார். இவரது பணியை பாராட்டி கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த், அவருக்கு ரூ. 3 ஆயிரம் ரொக்கப் பரிசும் சான்றிதழும் வழங்கினார். நிகழ்ச்சியில் முதுநிலை கோட்ட பொறியாளர்கள் நாராயணன், பிரவீனா, கோட்ட பாதுகாப்பு அதிகாரி முகைதீன் பிச்சை ஆகியோரும் கருப்பசாமியின் நற்செயலை பாராட்டினர்.