திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சின்ன பசிலிகுட்டை பகுதியைச் சேர்ந்த ராஜாதேசிங்கு என்பவருக்கு நான்கு வருடங்கள் முன்பு பூர்ணிமா (25) என்ற பெண்ணுடன் திருமணமாகி இரண்டு வயதில் ஆண் குழந்தை உள்ளது. பூர்ணிமா ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று வீட்டுக்கு அருகில் உள்ள மாட்டு கொட்டகையில் வாட்டர் சர்வீஸ் செய்யும் கருவியில், மாட்டு கொட்டகையை சுத்தம் செய்யும்போது எதிர்பாராத விதமாக கருவியில் இருந்து மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அதனை தொடர்ந்து உடலை, உடற்கூராய்வுக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிந்து பூர்ணிமாவின் உடல் இன்று வீட்டுக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், உறவினர்கள் முன்னிலையில் உடலை அடக்கம் செய்ய முற்பட்டனர்.
அப்போது உடலை அடக்கம் செய்ய தோண்டப்பட்ட குழியில் அவருடைய கணவர் ராஜதேசிங்கு குழி முழுவதும் உப்பை கொட்டி விட்டு அதில் திடீரென நிர்வாணமாக பூஜை செய்யத் தொடங்கினார். மேலும் தன்மீது உப்பை கொட்டிக் கொண்டும் குழியில் படுத்துக்கொண்டு பூஜை செய்த சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே பரபரப்பு ஏற்படுத்தியது.
இதுகுறித்த, அப்பகுதி மக்கள், ராஜதேசிங்கு, சில ஆண்டுகளுக்கு முன்பு சாமியார் போல் மாறியதாகவும் அவர் சிவபக்தர் எனவும் தெரிவிக்கின்றனர். மேலும், மனைவியின் உடலை புதைக்கும் குழியில் இறங்கி அகோரி போல பூஜை செய்ததால் தாங்கள் பயந்து விட்டதாகவும் தெரிவித்தனர்.