பத்திரிகை வெளியீடு – பாலின அடிப்படையிலான வன்முறைக்கு (GBV) எதிரான 16 நாட்கள் செயல்முனைவு 

ஒன்றிணையுங்கள்! பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான செயல்முனைவு: பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான (GBV) உலகளாவிய செயல்முனைவுடன் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து நிற்கின்றனர் 

தற்போதைய பொருளாதார நெருக்கடியுடன், இலங்கை புதிய பாதிப்புக்களை எதிர்கொள்கின்றது. நெருக்கடிக்கு முன்னரும் கூட, பாலின அடிப்படையிலான வன்முறையின் பாரதூரமான மனித உரிமை மீறல் காரணமாக, பெண்களும் பெண் குழந்தைகளும் முழுமையான சுதந்திரம், வாய்ப்புகள் மற்றும் பாதுகாப்பை அனுபவிக்கவில்லை.

மக்கள்தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரவியல் துறையால் நடாத்தப்பட்ட பெண்கள் நல்வாழ்வு ஆய்வு 2019 ஆனது, அவர்களின் வாழ்நாளில், எப்போதும் துணையுடன் இருக்கும் பெண்களில் 20 சதவீதம் பேர் நெருங்கிய துணையால் உடல் ரீதியான மற்றும்/அல்லது பாலியல் ரீதியான வன்முறையை எதிர்கொண்டுள்ளனர் என்றும், 25 சதவீதமான பெண்கள் 15 வயதிற்குப் பிறகு ஒரு துணை அல்லது துணை அல்லாதவர் மூலம் உடல் ரீதியான அல்லது பாலியல் ரீதியான வன்முறையை அனுபவித்துள்ளனர் என்றும் தெரிவிக்கின்றது.

18 சதவீதம் பேர் தங்கள் வாழ்நாளில் துணை ஒருவரினால் பொருளாதாரத் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியதாக வெளிப்படுத்தியுள்ளனர். துணை ஒருவரினால் வன்முறையை அனுபவித்தவர்களில் 21 சதவிகிதப் பெண்கள், நேர்காணலுக்கு மத்தியில் அதை யாரிடமும் வெளிப்படுத்தியதில்லை. 

பொருளாதார நெருக்கடியானது நிச்சயமாக இந்த ஏற்கனவே பாதிக்கப்படக்கூடிய நபர்களை மேலும் ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது. உயர் பணவீக்க விகிதங்கள் மற்றும் அதனால் ஏற்படும் பட்டினி, ஊட்டச்சத்து நெருக்கடி, வீடுகளில் ஏற்படும் செலவுப் போராட்டம், அதிகரித்து வரும் வறுமை நிலைகள், சமூக அமைதியின்மை, இனப்பெருக்க சுகாதாரம் மற்றும் பிற சேவைகள் உள்ளிட்ட சுகாதார உதவிகளின் குறைப்பு ஆகியவை பாலின அடிப்படையிலான வன்முறை மற்றும் அதன் விளைவாக ஏற்படும் பாதகமான தாக்கங்களுக்கு பெண்கள் மற்றும் சிறுமிகளை அதிகளவு பாதிப்பிற்குள்ளாக்க நேரிடும். 

2022 பிரச்சாரத்தின் உலகளாவிய தொனிப்பொருள், “ஒன்றிணையுங்கள்! பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான செயல்முனைவு” என்பதாகும். ஒற்றுமை இல்லாமல் GBVயை எதிர்த்துப் போராட முடியாது என்பதை வலியுறுத்துகின்றது, இதனால் அரசாங்கங்கள், அபிவிருத்திப் பங்காளர்கள், CSO க்கள், இளைஞர்கள், ஊடகங்கள் மற்றும் அனைத்து பங்குதாரர்களும் GBVக்கு எதிராகப் போராட ஒன்றுபட வேண்டும். எனவே, GBVக்கு எதிரான 16 நாட்கள் செயல்முனைவானது, இலங்கைப் பெண்களுக்கு சமவாய்ப்பு வழங்குவதற்கும், அவர்களுக்கு சமமான அடிப்படைகளை வழங்குவதற்குமான எமது இலக்குக்கான ஒரு முக்கியமான பரிந்துரைக் காலமாகும்.” கௌரவ (டாக்டர்) (திருமதி) சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே, பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் (WPC) தவிசாளர்.

“GBV என்பது இலங்கையில் பெண்களுக்கு ஒன்றும் புதிதல்ல. பெண்களாகிய நாம் அதை எப்போதும் எதிர்கொள்ள வேண்டும். ஆனால், அது சரியானதல்ல. அதை நாம் சாதாரணமாக்க அனுமதிக்க முடியாது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாம் எப்போதும் பாலின அடிப்படையில் வாய்மொழி ரீதியான வன்முறையை எதிர்கொள்கின்றோம். தேர்தலின் போதும், நம்மை யாரேனும் இழிவுபடுத்த எத்தனிக்கும் போதும், பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஆயுதம், நமது பாலின வகிபங்கினையும், பொதுவெளியில் நமது பாத்திரங்களை களங்கப்படுத்தும் ஒரே மாதிரியான சிந்தனையையும், ஒரு பெண் பாராளுமன்ற உறுப்பினராக அரசியலில் ஒரு தலைவராக வீட்டை விட்டு வெளியேறுவதனையும் தான். இதனை நாம் எதிர்த்துப் போராட வேண்டும். GBV யின் எந்த வடிவத்தினையும்  நாம் எதிர்த்துப் போராட வேண்டும்.” கௌரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன, WPC இன் உப இணைத் தவிசாளர் தலைவர்.

“இன்று இலங்கையின் இந்தப் பாரதூரமான சூழலில், GBVக்கு எதிரான இந்த வருடத்தின் 16 நாட்களுக்கான உலகளாவிய செயல்முனைவிற்குள் நாம் நுழைகின்றோம். பெண் பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்கள் இதை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கின்றோம். இலங்கையில் பாலின சமத்துவத்தை ஏற்படுத்த அல்லது மேம்படுத்துவதற்கு நாங்கள் மக்கள் பிரதிநிதிகளாக, எப்போதும் முயன்று வருகின்றோம்.” கௌரவ (திருமதி) கீதா சமன்மலீ குமாரசிங்ஹ, பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர், 

“அனைத்து இலங்கையர்களும் எந்தவொரு மனிதனுக்கும் எதிரான வன்முறை அல்லது பாலியல் துன்புறுத்தலுக்கும் பூஜ்ய சகிப்புத்தன்மையைக் கொண்டிருக்க வேண்டும் என்றும் GBV இன் இத்தகைய செயல்களுக்கு பூஜ்ஜிய சகிப்புத்தன்மையை வெளிப்படுத்தும் போதுமான பதில்களுடன் கூடிய கடுமையான வெறுப்பைக் காட்டுமாறும் நாங்கள் வலியுறுத்துகின்றோம். நமது அலட்சியமே குற்றவாளிகள் தாங்கள் செய்யும் இந்த மனித உரிமை மீறல்களை சாதாரணமாக்குகின்றது. எனவே, அமைதியாகவும் செயல்திறனற்ற பார்வையாளர்களாகவும் இருக்காமல் நாம் செயற்பட வேண்டும்.” கௌரவ (திருமதி) டயனா கமகே, சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர்.

“பொதுவாக பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது சமூகம் நம்பிக்கை இழந்துவிட்ட காலகட்டம் இது என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். எவ்வாறாயினும், எங்களிடையே கட்சி வேறுபாடுகள் இருந்தபோதிலும், பன்னிரண்டு பெண் பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்கள், GBVக்கு எதிராக, குறிப்பாக இலங்கையில் GBVக்கு எதிராகப் பெண்கள் எழுந்து நிற்பதற்கு அவர்களை வலுவூட்டுவதற்கு, உலகளாவிய சமூகத்துடன் ஒன்றிணைந்து நிற்கின்றோம்.” கௌரவ (திருமதி) மஞ்சுலா திசாநாயக, WPC இன் உறுப்பினர்

 “பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும் மகளிர் சட்டமூலத்தை உருவாக்குவதற்கு ஆதரவளிக்கும் நடவடிக்கையில் பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியமானது ஈடுபட்டுள்ளது. எவ்வாறாயினும், சட்டங்கள் மாத்திரம் மாற்றத்தை ஏற்படுத்தாது என்பதையும், சட்டமூலம் நிறைவேற்றப்படும் போது இலங்கையிலுள்ள பெண்களின் வாழ்வில் அர்த்தமுள்ள மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை உறுதிப்படுத்த நிறுவன ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் நிறைய வேலைகள் செய்யப்பட வேண்டும் என்பதையும் நாங்கள் உணர்ந்துள்ளோம்.” கௌரவ (கலாநிதி) (திருமதி) ஹரினி அமரசூரிய, WPC இன் உறுப்பினர்

இந்த உலகளாவிய இயக்கத்துடன் ஒன்றிணைந்து நிற்பதற்கு, பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் நவம்பர் 25 ஆம் தேதி முதல் தொடர்ச்சியான பரிந்துரை நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளனர். அவர்கள் GBV யை எதிர்த்துப் போராடுவது தொடர்பில் நவம்பர் 28 மற்றும் 29 ஆம் தேதிகளில் இரண்டு குழுக் கலந்துரையாடல்களை நடாத்துகின்றனர். மற்றும் டிசம்பர் 1 ஆம் தேதி செய்தியாளர் சந்திப்பு ஒன்றையும் நடாத்துகின்றனர்.

செய்தியாளர் சந்திப்பு நாள் அன்று, “பாலின அடிப்படையிலான வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக ஒன்றிணைவோம்” என்ற செய்தியுடன் கூடிய கைப்பட்டி ஒன்று ஒற்றுமை நடவடிக்கையாக பாராளுமன்ற உறுப்பினர்களின் கைகள் மீது கட்டப்படும். பாராளுமன்ற பெண் உறுப்பினர்கள் செம்மஞ்சள் நிற உடையில் வருமாறு அழைப்பு விடுக்கப்படுவார்கள். 

இது சமீபத்தில் நிறுவப்பட்ட அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் சான்றாதாரம் கிடைக்கக் கூடிய பாலின சமத்துவம் மற்றும் சமூக உள்ளடக்கம் தொடர்பான வெளியீடுகளைக் கொண்ட பாராளுமன்ற நூலகத்தின் பாலின மற்றும் சமூக உள்ளடக்கப் பிரிவில் இடம்பெறும். GBV க்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நம்பிக்கையில் இந்த நடவடிக்கைகள் அனைத்தும் பாராளுமன்றத் தகவல் முறைமைகள் திணைக்களம் மற்றும் பாராளுமன்ற செயலகத்துடன் கைகோர்த்து மேற்கொள்ளப்படும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.