தாம்பரம் நகைக்கடையில் துணிகர கொள்ளை; சிறுவர்கள் உட்பட மூன்று பேர் கைது – நடந்தது என்ன?

சென்னை அருகேயுள்ள தாம்பரம் சேலையூர்-வேளச்சேரி சாலையில் பிரபல தனியார் நகைக்கடை செயல்பட்டு வருகிறது. நேற்று வழக்கம் போல, வியாபாரம் முடிந்த பிறகு அந்த கடை ஊழியர்கள் கடையைப் பூட்டிவிட்டுச் சென்றிருக்கின்றனர். இன்று அதிகாலை அந்தக் கடையில் எச்சரிக்கை அலாரம் ஒலித்திருக்கிறது. இதனையடுத்து, இந்தத் தகவல் காவல்துறையினருக்குத் தெரிவிக்கப்பட்டது.

கொள்ளையடிக்கப்பட்ட நகைக்கடை

தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் விரைந்து சென்றிருக்கின்றனர். அப்போது, கொள்ளையர்கள் சிலர், மாடியிலிருந்து லிஃப்ட் வழியாகக் கடைக்குள் நுழைந்திருக்கிறார்கள். முதலில் கடையில் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த நகைகளைக் கொள்ளையடித்திருக்கிறார்கள். அடுத்ததாக, நகைகளை வைத்திருந்த லாக்கரைத் திறக்க முயற்சி செய்திருக்கிறார்கள்.

அப்போதுதான் கடையின் எச்சரிக்கை அலாரம் ஒலித்திருக்கிறது. சுதாரித்துக்கொண்ட கொள்ளையர்கள், அங்கிருந்து கொள்ளையடித்த பல லட்ச ரூபாய் மதிப்பிலான நகைகளுடன் தப்பிச் சென்றிருக்கிறார்கள். கொள்ளை நடைபெற்ற இடத்துக்குக் கைரேகை, தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. மேலும், கடையில் பதிவான சி.சி.டி.வி காட்சிகளின் அடிப்படையில், கொள்ளையர்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. வட மாநிலத்தைச் சேர்ந்த சிலர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

நகைகளை கொள்ளையடிக்கும் கொள்ளையர்கள்

சி.சி.டி.வி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டபோது, கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர் ஒருவர், அதே பகுதியில் வீடு எடுத்துத் தங்கியிருந்தது தெரியவந்தது. அதையடுத்து அவனைக் கைதுசெய்த போலீஸார், தொடர் விசாரணை மேற்கொண்டு… கொள்ளையில் தொடர்புடைய மேலும் இருவரைக் கைதுசெய்திருக்கின்றனர். கைதுசெய்யப்பட்ட கொள்ளையர்கள் 18- வயதுக்கும் குறைவானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதிகாலையில் நடந்த கொள்ளைச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.