நிச்சயதார்த்தம் நடைபெற்றிருந்த நிலையில், நடிகர் வித்யாபரண் – நடிகை வைஷ்ணவி கவுடாவின் திருமண பந்தம் முறிந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னட திரையுலகில் நடிகராக இருப்பவர் வித்யாபரண். இவர், ‘சாக்லேட் பாய்’ என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆகி இருந்தார். இதுபோல், கன்னட திரையுலகில் நடிகையாக இருந்து வருபவர் வைஷ்ணவி கவுடா. இவர்கள் 2 பேருக்கும் சமீபத்தில் பெற்றோரின் சம்மதத்துடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றிருந்தது. இந்த நிலையில் வித்யாபரண், வைஷ்ணவி கவுடா இடையே திருமண பந்தம் முறிந்துள்ளது.
நடிகர் வித்யாபரண் பற்றி நடிகை வைஷ்ணவி கவுடாவுடன் ஒரு பெண் பேசும் ஆடியோ சமூக வலைத்தளங்களில் நேற்று வேகமாக பரவியது. அந்த ஆடியோவில் வித்யாபரண் பற்றி வைஷ்ணவி கவுடாவிடம் அந்த பெண் அவதூறாக பேசுவது, அவரை பற்றி பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறுவது இடம் பெற்றிருக்கிறது.
இதன்காரணமாக வித்யாபரணை திருமணம் செய்ய வைஷ்ணவி கவுடா மறுத்து விட்டதாகவும், அவர்களுக்கு நடைபெற இருந்த திருமணம் முறிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் தனக்கும், வித்யாபரணுக்கும் இடையே நிச்சயதார்த்தம் எதுவும் நடைபெறவில்லை. இரு வீட்டு பெற்றோரும் திருமணம் செய்ய முடிவு செய்திருந்தார்கள். மாலை மட்டும் மாற்றி இருந்தோம் என்று நடிகை வைஷ்ணவி கவுடா விளக்கம் அளித்திருக்கிறார்.
இதே கருத்தை நடிகர் வித்யாபரணும் கூறியுள்ளார். எங்களுக்கு நடந்தது திருமண நிச்சயதார்த்தம் இல்லை என்று அவர் விளக்கம் அளித்திருக்கிறார். அதே நேரத்தில் தன் மீதும், குடும்பத்தினர் மீதும் அவதூறு பரப்பும் விதமாகவும், தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாகவும் ஒரு பெண் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி ஆடியோவில் பேசி உள்ளார். அவர் யார்? என்பது தெரியவில்லை என்று நடிகர் வித்யாபரண் கூறியுள்ளார்.
அத்துடன் தன்னை பற்றி அவதூறு பரப்பி, குற்றச்சாட்டு கூறிய பெண் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி கோரி பெங்களூரு போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டியை நேற்று சந்தித்து நடிகர் வித்யாபரண் புகார் அளித்தார். அந்த புகாரை பெற்றுக் கொண்ட போலீஸ் கமிஷனர், சுப்பிரமணியபுரா போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.