100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து?; பீதி கிளப்பும்..ஷாக் நியூஸ்! பாகம்-1

ஆதார் அட்டையை மத்திய அரசு அறிமுகம் செய்தது முதல் நாட்டு மக்களுக்கு பல்வேறு வழிகளில் குடைச்சல் கொடுக்கப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் ஆதார் கட்டாய ஆவணம் இல்லை என்று அறிவிக்கப்பட்டாலும், நாளடைவில் அனைத்துக்குமான ஆவணமாகவே ஆதார் அட்டை மாறியது.

இதன் ஒரு பகுதியாக, பொதுமக்களின் அனைத்து விதமான அடையாள ஆவணங்களையும் ஆதார் எண்ணுடன் இணைக்கும் நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரப்படுத்தி வருகின்றன.

அந்த வகையில்தான் சமீபத்தில் மத்திய அரசு அனைவருடைய ஆதார் எண்களுடன் TANGEDCO ன் மின் நுகர்வோர் எண்களை இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது.

அப்போது பொதுமக்களுக்கு வழங்கப்படுகிற மானியங்கள் அனைத்தையும் முறைப்படுத்துவதற்காக இந்த இணைப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக, மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

தற்போதைய சூழலில் தமிழ்நாட்டில் மொத்தம் 2.30 கோடி மின் இணைப்புகள், 22 லட்சம் விவசாய மின் இணைப்புகள் மற்றும் 11 லட்சம் குடிசை வீட்டு மின் இணைப்புகள் உள்ளன.

இந்த மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தமிழக மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அத்துடன் இந்த பணி தொடங்கப்பட்டு கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது.

மேலும், தற்போது வரை தமிழகத்தில் 15 லட்சம் பேர் ஆதார் எண்களை இணைத்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதே சமயம், ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைப்பது குறித்து தமிழகம் முழுவதும் பல்வேறு தகவல்கள் பரவி வருகிறது.

அதாவது அதிக அளவிலான மின் இணைப்பு வைத்திருப்பவர்களுக்கு அரசு வழங்கும் இலவச 100 யூனிட் மின்சாரம் இனி கிடையாது. அவை ரத்து செய்யப்படும் என, சில தகவல்கள் பரவி வருகிறது. இதனால் ஏழை எளிய மக்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

இந்த பரபரப்பான சூழலில் தமிழ்நாடு மின்வாரிய துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறுகையில், ‘ஒரு பயனாளி 5 மின் இணைப்புகள் வைத்திருந்தாலும் இலவசமாக வழங்கப்படும் 100 யூனிட் மின்சாரத்தை தொடர்ந்து பெற்றுக் கொள்ளலாம்.

மின் இணைப்பு எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்கும் பணி தொடங்கி உள்ளது. இதுவரையில் 15 லட்சம் ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைத்து உள்ளனர்.

இந்த பணிக்காக மின் வாரியத்தின் 2811 பிரிவு அலுவலகங்களிலும் டிசம்பர் 31ம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. இதனை பயன்படுத்தி மக்கள் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம்.

ஆதார் இணைப்பு தொடர்பாக சிலர் உண்மைக்கு மாறாக கருத்துக்களை பகிர்கின்றனர். வீடுகள், விவசாயம், குடிசை வீடுகள் மற்றும் விசைத்தறிகளுக்கு ஏற்கனவே நடைமுறையில் உள்ள இலவச மற்றும் மானிய விலை மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும்.

அதில் எந்த மாற்றமும் இல்லை. எவ்வளவு பேர் சொந்த வீடுகளில் உள்ளனர்? வாடகைதாரர்கள் எவ்வளவு பேர் உள்ளனர்? ஒருவர் பெயரில் எத்தனை மின் இணைப்புகள் உள்ளன? என்பன போன்ற தகவல் இல்லை.
(மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் பேட்டி பாகம்-2 ல் தொடரும்)
.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.