அவர்கள் அணிகள் இல்லை பிணிகள் – ரைமிங்கில் ஓபிஎஸ்ஸை வெளுத்த ஜெயக்குமார்

ஜெயலலிதாவின் ஆறாவது ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி எடப்பாடி பழனிசாமி அணியினர் மெரினாவில் இருக்கும் ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தினர். அதன் பிறகு அதிமுகவை கட்டிக்காப்போம் என உறுதிமொழியும் எடுத்துக்கொண்டனர். இந்த அஞ்சலி மற்றும் உறுதிமொழிக்கு பிறகு முன்னாள் அமைச்சரும், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளருமான ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “அதிமுகவில் 4 அணிகள் கிடையாது. எந்த பிரிவும் இல்லை. பிளவும் இல்லை. கட்சியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சிலர் நீக்கப்பட்டுள்ளார்கள். 66 எம்எல்ஏக்களில் 62 பேர் அதிமுகவில்தான் இருக்கிறார்கள். தலைமைக்கழக நிர்வாகிகள் 75 பேரும், மாவட்ட செயலாளர்கள் 75 பேரும் கட்சியில்தான் இருக்கிறார்கள். கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் அணிகள் அல்ல பிணிகள். அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான் என்பது உலகுக்கே தெரியும். 

அதனால்தான் ஜி20 மாநாடு தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இது சட்டப்படியான விஷயம்தான். தி.மு.க.வில் உழைப்பவருக்கு மரியாதை இல்லை. புதிதாக வந்தவர்களுக்கு கூட பதவிகள் வழங்கப்படுகிறது என்று ஆர்.எஸ்.பாரதி கூறியிருக்கிறார். திமுகவில் குமுறல் எழுந்துள்ளது. அது உள்ளக்குமுறல் நீறு பூத்த நெருப்பு. அதன் வெளிப்பாடாகத்தான் முதலில் ஒரு பூனைக்குட்டி வெளியே வந்துள்ளது. இன்னும் நிறைய பேர் வருவார்கள். அந்த அளவுக்கு அந்த கட்சியின் நிலைமை உள்ளது” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.