உரத்தை விரைவில் விவசாயிகளுக்கு வழங்குவதாக விவசாய அமைச்சு அறிவிப்பு

இம்முறை பெரும் போகத்திற்குத் தேவையான மொத்த உரத்தொகையும் (MOP – Muriate of Potash) கிடைத்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இறக்குமதி செய்யப்பட்டுள்ள உரத்தை விரைவில் விவசாயிகளுக்கு வழங்குவதாக விவசாய அமைச்சு அறிவித்துள்ளது.

பசளையை ஏற்றி வந்த இரண்டு கப்பல்கள் நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன. இதற்கு முன்னர் நாட்டை வந்தடைந்த கப்பலிலிருந்து பசளையை தரையிறக்கும் பணி தற்போது இடம்பெற்று வருகிறது.

அமெரிக்கா, இலங்கைக்கு ஒன்பதாயிரத்து 300 மெற்றிக் தொன் பசளையை வழங்கியுள்ளது. சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகம் வழங்கியுள்ள இந்தப் பசளை அந்த நிறுவனம் நாட்டுக்கு வழங்கும் உதவியின் முதல் தொகுதியாகும்.

அமைச்சர் மஹிந்த அமரவீர இந்தப் பசளையை நேற்று (05)கொழும்பு துறைமுகத்தில் பொறுப்பேற்றார். அங்கு கருத்து வெளியிட்ட இலங்கைக்கான அமெரிக்க தூதுவர், இலங்கையின் விவசாயிகளுக்கு உதவ தமது நாடு விருப்புத்துடன் இருப்பதாக குறிப்பிட்டார்.

உலக வங்கியின் கடன் திட்டத்தின் கீழ் நாட்டுக்கு கிடைத்துள்ள யூரியா பசளையின் அளவு 85 ஆயிரம் மெற்றிக் தொன்களாகும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.