விவசாயிகளை ஒடுக்கத்தான் 56 இன்ச்..ஆனா சீனா முன்னாடி 0.56 இன்ச் தான்..ஆம் ஆத்மி சாடல்.!

சீனாவுடனான எல்லை பிரச்சினை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. எல்லை பிரச்சினை தொடர்பாக பலகட்டப் பேச்சுவார்த்தைகள் நடத்தியும் பலனில்லை. எந்தவொரு ஒப்பந்தத்திற்கும் உடன்பட சீனா மறுத்து வருவதாக குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகின்றன. இத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், சரச்சைக்குரிய பகுதிகளில் சாலைகள் அமைத்தல், ராணுவ கட்டமைப்புகளை ஏற்படுத்துதல், பாலங்கள் அமைத்தல் போன்ற அத்துமீறல் செயல்களில் சீனா தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.

இதனிடையே, அருணாச்சலப் பிரதேச மாநிலம் தவாங் செக்டார் பகுதியில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு அருகே, கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்தியப் பகுதிக்குள் சீன வீரர்கள் ஊடுருவ முயன்றனர். இதைக் கண்ட இந்தியப் படைகள், உடனடியாக அவர்களை தடுத்து நிறுத்தின. அப்போது, இந்திய – சீன வீரர்களுக்கு இடையே இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில், இரு தரப்பு படைகளைச் சேர்ந்த வீரர்களுக்கும் பலத்த காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த தகவலை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் உறுதி படுத்தியுள்ளார்.

சீனாவுடனான எல்லை பிரச்சினை தொடர்பாக மத்திய பாஜக அரசை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்து வருகிறது. மத்திய அரசு இந்திய பகுதிகளை சீனாவுக்கு தாரை வார்ப்பதாகவும், பிரதமர் மோடி இந்த விவகாரத்தில் அச்சப்படுவதாகவும் காங்கிரஸ் கட்சியினர் சாடி வருகின்றனர். அருணாச்சலப் பிரதேச மாநிலம் தவாங் செக்டார் தொடர்பாக கருத்து தெரிவித்த ராகுல் காந்தி, சீனா பெரிய போருக்கு தயாராகி வருகிறது. ஆனால், இந்திய அரசோ தூங்கிக் கொண்டிருக்கிறது என விமர்சித்தார். இதற்கு பாஜகவினர் எதிர்வினையாற்றினர்.

சீனாவுடனான எல்லை பிரச்சினை நாடாளுமன்றத்திலும் எதிரொலித்துள்ளது. எல்லையில் சீனாவின் ஊடுருவல் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என வலியுறுத்தி நடந்து வரும் குளிர்காலக் கூட்டத்தொடரில் எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், விவாதம் நடத்த அனுமதி அளிக்கப்படவில்லை.

அதனால், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு எதிர்க்கட்சிகள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட், திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட 16 கட்சிகள் கலந்து கொண்டன. காங்கிரஸ் தலைவர் கார்கே, சோனியா காந்தி, பா.சிதம்பரம், திமுக எம்.பி., ஆ.ராசா உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் விவசாயிகளுக்கு தான் 56 இன்ச் மார்பை பிரதமர் காட்டுகிறார், சீனாவிடமோ 0.56 இன்ச் மார்பை பிரதமர் காட்டுவதாக ஆம் ஆத்மி குற்றம்சாட்டியுள்ளது. இது குறித்து ஆம் ஆத்மியின் சஞ்சய் சிங் கூறும்போது, ‘‘ எல்லையில் என்ன நடக்கிறது என்பதை நாட்டு மக்களுக்கும், நாடாளுமன்றத்திற்கும் சொல்ல வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது.

ஒரே பாலின திருமணங்களுக்கு சட்டம் இயற்ற முடியாது; பாஜக எம்பி கடு கடு..!

அடிப்படை உரிமைகளுக்காக போராடும் விவசாயிகளிடம், 56 இன்ச் அளவிலான விரிந்த மார்பை கொண்டு இந்த அரசு அடக்குமுறை ஏவுகிறது. ஆனால் சீன விவகாரத்தில் 0.56 என்ற அளவில் சுருங்கி இருந்த இடம் தெரியாமலேயே காணாமல் போய்விடுகிறது. இவ்வளவு நடந்ததற்கு பின்னரும், சீனாவிடம் இருந்து அதிகளவில் இறக்குமதி செய்யப்படுகிறது. ஏன் மத்திய அரசு அப்படி செய்கிறது என்பது புரியவில்லை. எல்லையை பாதுகாக்க நம் வீரர்கள் உயிரைக் கொடுக்கின்றனர். ஆனால் அரசு சீனாவிடம் நல்ல வர்த்தகத்தை பேணுகிறது’’ என அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.