சீனாவில் பரவி வரும் பிஎஃப்.7 கொரோனா வைரஸ் உலக நாடுகள் மத்தியில் மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த உயர்மட்ட ஆலோசனைக்கூட்டத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் கலந்து கொண்டு தங்களது ஆலோசனையை வழங்கின.
இந்த நிலையில், பிஎஃப்.7 கொரோனா வைரஸ் தொடர்பாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கலந்துரையாடியபோது, ‘மாநிலங்கள் விழிப்புடன் இருப்பதோடு கொரோனாவை கட்டுப்படுத்த தயார் நிலையில் இருக்க வேண்டும்.
இதற்கு முன்பு கொரோனா பரவலை தடுக்க பணியாற்றியது போலவே தற்போதும் மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். கொரோனா கண்காணிப்புகளை தீவிரப்படுத்தி சோதனையை அதிகப்படுத்த வேண்டும். மருத்துவமனை உட்கட்டமைப்பு வசதிகளை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.
இந்த பரபரப்பான சூழலில் கொரோனாவுக்கு எதிரான போரில் மேலும் ஒரு சாதனையாக பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள மூக்கு வழியாகச் செலுத்தும் தடுப்பு மருந்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி இருக்கிறது.
மேலும், மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பு மருந்தை கோவின் வலைதளத்தில் சோ்க்க வேண்டும் என, மத்திய அரசுக்கு பாரத் பயோடெக் நிறுவனம் வேண்டுகோள் விடுத்து இருந்த நிலையில் மத்திய அரசு இந்த மருந்துக்கு அனுமதி வழங்கி உள்ளது.
மத்திய அரசின் தடுப்பூசி திட்டத்தில் ‘இன்கோவாக்’ என்கின்ற மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பு மருந்தும் இடம்பெறும். முதற்கட்டமாக இந்த மருந்து தனியார் மருத்துவமனைகளில் மட்டும் செலுத்தப்பட உள்ளது.
அதன்படி இன்று மாலையே கோவின் இணையதளத்தில் இந்த மருந்து இணைக்கப்பட உள்ளது. அதன் பின்னர், மக்கள் தங்கள் பகுதிக்கு அருகே இருக்கும் தனியார் மருத்துவமனைகளில் ‘இன்கோவாக்’ மருந்தை முன்னெச்சரிக்கை தவணையாக போட்டுக் கொள்ளலாம்.
அதே சமயம் இந்த மருந்தை 18 வயதுக்கு உட்பட்டவர்களும், கொரோனா தடுப்பூசி போடாதவர்களும் செலுத்திக் கொள்ள அனுமதிக்கப்படவில்லை என தகவல்கள் கூறுகின்றன.
மூக்கு வழியாக செலுத்தும் ‘இன்கோவாக்’ தடுப்பு மருந்துக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு (டிசிஜிஐ) இந்த மாத துவக்கத்தில் தான் ஒப்புதல் அளித்து இருந்தது.
தடுப்பூசிகளுக்கு நிகராக இந்த, ‘இன்கோவாக்’ தடுப்பு மருந்தும் செயல்படுவதாக, கூறப்படுகின்றது. மேலும் இன்கோவாக் மருந்து தயாரிப்பது, மற்ற தடுப்பூசி தயாரிப்பை விடவும் செலவு குறைவாக உள்ளதாக கூறப்படுகிறது.
மூக்கின் உள்புறம் மற்றும் மூச்சு குழாயின் மேல் பகுதியில் வைரஸ் தொற்று தாக்காமல் தடுக்கும் விதமாக ‘இன்கோவாக்’ மருந்து தயாரிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த மருந்தை 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் கொரோனா 2 தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் முன்னெச்சரிக்கை தவணையாக செலுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனா, ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில், மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்து இருப்பது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.