XXB.1.5 ஒமிக்ரான் உருமாறிய
கொரோனா வைரஸ்
. இப்படி ஒரு சிக்கலான பெயரை பெரிதாக கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லை. குறிப்பாக இந்தியர்கள் முதல்முறை கேள்விப்படலாம். இந்த வைரஸ் நமது நாட்டிற்குள் நுழைந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் குஜராத் மாநிலத்தில் முதல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு விஷயம் தீயாய் பரவி கொண்டிருக்கிறது. ஏன் ஒட்டுமொத்த இந்தியாவிலேயே இதுதான் முதல் நோய்த்தொற்று. இந்த வைரஸ் அப்படியென்ன செய்துவிடும் என்று கேட்கிறீர்களா? இங்கு தான் விவகாரமான விஷயமே இருக்கிறது.
அமெரிக்காவில் தற்போது பரவியுள்ள 40 சதவீதத்திற்கும் மேலான கொரோனா வைரஸ் பாதிப்புகள் ஒமிக்ரான் XBB .1.5 வகையை சேர்ந்தவை. 7 மாகாணங்களில் பாதிப்புகள் அதிகரிக்கவும், மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை கிடுகிடுவென உயரவும் முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
இது அதிவேகமாக பரவக்கூடியது. நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அப்படியே ஓரங்கட்டி வேலையை ஆரம்பித்துவிடுமாம். BQ மற்றும் XBB ஆகிய ஒமிக்ரான் வைரஸை காட்டிலும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது. குறிப்பாக XBB.1.5 ஒமிக்ரான் வைரஸின் பரவும் R மதிப்பு மற்றும் தொற்றின் வேகம் ஆகியவை மிக மிக ஆபத்தான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதுவரை உலகம் கண்டதிலேயே மோசமான வைரஸ் XBB.1.5 எனச் சொல்லப்படுகிறது.
ஆசியாவில் சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் படிப்படியாக பரவத் தொடங்கியுள்ளது. அந்த வகையில் குஜராத்தில் XBB.1.5 ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து சம்பந்தப்பட்ட நபரை தனிமைப்படுத்தி தீவிர கண்காணிப்பிற்கு உட்படுத்தியுள்ளனர். அண்டை மாநிலமான மகாராஷ்டிராவிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்தியாவை பொறுத்தவரை வெளிநாடுகளில் இருந்து வருவோர் விமான நிலையங்களில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அனைவரிடமும் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கொரோனா வைரஸ் பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன. ஏற்கனவே 90 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் இரண்டு டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொண்டனர். 30 சதவீதம் பேர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் வீரியத்துடன் இருக்கும். அதற்காக நாம் அலட்சியமாக இருக்கக் கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.