கடந்த நவம்பர் 28ஆம் தேதி முதல் பொதுமக்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்க வேண்டும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்தது. அதன்படி தமிழக மின்வாரியம் சார்பில் நடத்தப்படும் சிறப்பு முகாம்கள் மூலம் நுகர்வோர்கள் ஆதார் எண்ணை இணைத்து வந்தனர். ஆதார் எண் இணைப்பதற்கான கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் தற்பொழுது காலம ஆவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி சென்னையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பாலாஜி தலைமையில் சிறப்பு ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் அனைத்து மண்டல தலைமை பொறியாளர்கள் மற்றும் மின்பகரமான வட்ட மேற்பார்வை பொறியாளர்கள் காணொளி வாயிலாக கலந்து கொண்டனர்.
இந்த ஆய்வுக் கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி “தமிழகத்தில் 60 சதவீதம் மின்னினைப்புடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கன்னியாகுமரியில் 77 சதவீதமும் குறைந்தபட்சமாக கிருஷ்ணகிரியில் 51 சதவீத மக்களும் ஆதார் எண் இணைந்துள்ளனர்.

ஆதார் எண் இணைப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என மின்வாரிய ஆய்வுக் கூட்டத்தில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதன்படி தமிழக முதல்வர் ஸ்டாலின் அனுமதி பெற்று ஜனவரி 31ஆம் தேதி வரை மின்னிணைப்புடன் ஆதார் எண் இணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 31ஆம் தேதிக்கு பிறகு கால அவகாசம் நீட்டிக்கப்படாது. இன்று புத்தாண்டு தினம் என்பதால் சிறப்பு முகாம் நடைபெறாது நாளை முதல் ஜன.31ம் தேதி வரை சிறப்பு முகாம்கள் செயல்படும்” என தெரிவித்துள்ளார்.