சோசியல் மீடியாவில் இருந்து வெளியேறிய பிரசாந்த் நீல்

சில ஆண்டுகளுக்கு முன்பு கன்னட திரை உலகில் தயாராகி பான் இந்தியா படமாகி வெற்றி பெற்ற கேஜிஎப் படத்தின் மூலம் அந்த படத்தின் நாயகன் யஷ் மட்டுமல்ல, படத்தை இயக்கிய இயக்குனர் பிரசாந்த் நீலும் முன்னணி இயக்குனர் வரிசைக்கு உயர்ந்தார். தொடர்ந்து கடந்தாண்டு வெளியான கேஜிஎப் 2 திரைப்படம் முதல் பாகத்தை விட மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த இரண்டாம் பாகம் வெளியாவதற்கு முன்பே தெலுங்கில் பிரபாஸ் நடிக்கும் சலார் என்கிற படத்தை இயக்க ஆரம்பித்து விட்டார் பிரசாந்த் நீல். இதற்கு அடுத்ததாக அவர் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகி விட்டது.

இந்த நிலையில் தற்போது தனது சோசியல் மீடியா கணக்கை அதிரடியாக டி-ஆக்டிவேட் செய்து விட்டு வெளியேறியுள்ளார் பிரசாந்த் நீல். இது கன்னட திரை உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தன்னுடைய கேஜிஎப் ஹீரோவான யஷ்ஷின் பிறந்தநாளுக்கு உருது மொழியில் வாழ்த்து தெரிவித்திருந்தார் பிரசாந்த் நீல். கன்னடத்தை அதிக அளவில் நேசிக்கும் யஷ்ஷின் ரசிகர்களுக்கு பிரசாந்த் நீலின் இந்த உருது பிறந்தநாள் வாழ்த்து கோபத்தையே ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து பலரும் அவருக்கு கண்டனங்களை தெரிவித்ததுடன் அவரை ட்ரோல் செய்யவும் ஆரம்பித்தனர்.

அதுமட்டுமல்ல கேஜிஎப் வெற்றிக்கு பிறகு தொடர்ந்து அடுத்தடுத்து தெலுங்கு படங்களுக்கே அவர் முக்கியத்துவம் கொடுத்து இயக்குவதால் அவர் மீது தங்களுக்கு இருந்த கோபத்தையும் இதில் சேர்த்து ரசிகர்கள் காண்பித்து விட்டனர் என்றும் சொல்லப்படுகிறது. இதை தொடர்ந்து அவர்களிடம் இருந்து வெறுப்பு வார்த்தைகளை பெற வேண்டாம் என்று முடிவு எடுத்த பிரசாந்த் நீல் அதனாலேயே தனது சோசியல் மீடியா கணக்கை விட்டு விலகி விட்டார் என்று சொல்லப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.