மக்களைத் தேடி மருத்துவம்: குற்றம்சாட்டிய எடப்பாடி… சவால் விட்ட அமைச்சர் மா.சு – என்ன நடந்தது?!

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் பல்வேறு குளறுபடிகள் நீடிப்பதாகவும், மருந்து செலவுகள், விநியோகங்கள், பயனாளிகளின் விவரங்கள் உள்ளிட்டவற்றில் எந்தவிதமான புள்ளிவிவரங்களும் இல்லை என குற்றம்சாட்டியிருந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு, மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், `எல்லா விவரங்களும் தயார் நிலையில் இருக்கிறது; தேவைப்பட்டால் அலுவலகத்திற்கு வந்து பார்த்து தெரிந்து கொள்ளவும்’ என பதிலடி கொடுத்திருக்கிறார்.

மக்களைத் தேடி மருத்துவம்

மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்:

கடந்த 2021 ஆகஸ்ட் 5-ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கிருஷ்ணகிரி மாவட்டம் சாமனப்பள்ளி எனும் கிராமத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின்கீழ் நீரிழிவு நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட பாதிப்புகள் இருக்கும் நோயாளிகளைக் கண்டறிந்து சுமார் ஒரு கோடிக்கும் அதிகமானவர்களைச் சென்றடையும் வகையில் அவர்களின் வீடுகளுக்கே சென்று மருந்து, மாத்திரைகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த 2022 டிசம்பர் 29-ம் தேதி மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் `ஒரு கோடியே ஒன்றாவது பயனாளியாக ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட திருச்சி மாவட்டம் சன்னாசிப்பட்டியிலுள்ள மீனாட்சி என்பவர் கண்டறியப்பட்டு, அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கைகளால் மருந்து பெட்டகமும் வழங்கப்பட்டது.

அ.தி.மு.க எடப்பாடி பழனிசாமி அறிக்கை:

இந்த நிலையில், நேற்று ஜனவரி 19-ம் தேதி அ.தி.மு.க இடைக்காலப் பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, “ஒரு கோடி பேருக்கும்மேல் மருந்துப் பெட்டகங்கள் நோயாளிகளுக்கு கொடுத்ததாக எந்தவிதமான புள்ளி விவரக் குறிப்பும் இல்லை; மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் பல குளறுபடிகள் உள்ளன!” எனக் குற்றம்சாட்டி அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமி – ஸ்டாலின்

அந்த அறிக்கையில், “‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தில் பல குளறுபடிகள் உள்ளன, பெரும்பாலான நோயாளிகளுக்கு தொடர்ந்து மருந்துப் பொருட்கள் வழங்கப்படுவதில்லை என்று கூறுகிறார்கள். குறிப்பாக நோயாளிகள் இத்திட்டத்தைப் பற்றி, `முதல் தடவை மட்டும் எங்களை பரிசோதித்து, மாத்திரை கொடுத்துட்டுப் போனாங்க’, `முதல் தடவை வந்த போது மாசா மாசம் வீட்டுக்கே வந்து மாத்திரை தந்து, பிபி, சுகர் செக் பண்ணிட்டுப் போவோம்னு சொன்னாங்க. ஆனால், அதன் பிறகு இதுவரை ஒருநாள்கூட வந்து பார்க்கல. அருகில் உள்ள தெரிந்தவர்களிடம் காசு கொடுத்து, மாத்திரை வாங்கி சாப்பிடுகிறேன்’, `போனவங்க வரவே இல்ல!’. `போட்டோ எடுக்க மட்டும் வந்தாங்க!’, `யாராவது வந்து கேட்டா அடிக்கடி வர்றாங்கன்னு சொல்லச் சொன்னாங்க’ என்று கூறியதையும், அத்திட்டத்தில் உள்ள குளறுபடிகளையும் கடந்த 7.8.2022 அன்று நான் வெளியிட்டிருந்த அறிக்கையில் விவரமாக எடுத்துரைத்திருந்தேன்.

மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்

இந்நிலையில், 29.12.2022 அன்று விடியா அரசின் முதல்வர் ஸ்டாலின் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் ஒரு கோடியே ஒன்றாவது பயனாளிக்கு மருத்துவப் பெட்டகத்தை வழங்கியதாக தமிழக அரசு செய்திக் குறிப்பு வெளியிட்டிருந்தது. அப்படி ஒரு கோடி பேருக்குமேல் மருந்துப் பெட்டகங்கள் வழங்கப்பட்டிருந்தால், மருந்துக்காக மட்டும் எவ்வளவு செலவிடப்பட்டுள்ளது என்றும், என்னென்ன நோய்க்கு எந்த வகையான மருந்துகள் வாங்கப்பட்டுள்ளன. ஒரு கோடி பயனாளிகளின் விவரங்கள் ஏதேனும் உள்ளனவா என்றும் விசாரித்தபோது, மாநில மருத்துவத் துறை அதிகாரிகள் உண்மையில் மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டத்தின்கீழ் இதுவரை ஒரு கோடி பேருக்கும்மேல் மருந்துப் பெட்டகங்கள் நோயாளிகளுக்கு கொடுத்ததாக எந்தவிதமான புள்ளி விவரக் குறிப்பும் இல்லை என்று தெரிவித்ததாக நாளிதழ்களில் செய்திகள் வந்துள்ளன.

மேலும், நோயாளிகள் பற்றிய புள்ளி விவரங்களில் டூப்ளிகேஷன், அதாவது ஒரே புள்ளி விவரம், இரண்டு, மூன்று முறை பதிவு செய்யப்பட்டதால், ஒரு கோடி பேருக்குமேல் பயன் பெற்றுள்ளனர் என்றும் மருத்துவத் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். எனது தலைமையிலான அதிமுக ஆட்சியில் செயல்படுத்திய வலி நிவாரணம் மற்றும் புனர்வாழ்வு சிகிச்சை என்ற திட்டத்தில், ஒரு வாகனத்தை மட்டும் கூடுதலாக்கி, இந்த அரசு ‘மக்களைத் தேடி மருத்துவம்’ என்று மீண்டும் ஸ்டிக்கர் ஒட்டி செயல்படுத்தி இருக்கிறது.

மக்களைத் தேடி மருத்துவம்

ஆட்சிக்கு வந்து 20 மாதங்கள் முடிவடைந்த பிறகும், இப்போதும் முந்தைய ஆட்சியின் மீது குறைகள் சொல்லியே விளம்பர ஆட்சி நடத்தி வரும் இந்த அரசு, மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்திற்காக இதுவரை எவ்வளவு ரூபாய் அரசின் சார்பாக செலவிடப்பட்டுள்ளது என்றும், ஒரு கோடி பயனாளிகளின் முழு விவரங்களையும் இந்த விளம்பர அரசின் முதல்வரையும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரும் வெளியிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என தெரிவித்திருந்தார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்:

எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு சவால் விடுக்கும் வகையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கமளித்திருக்கிறார். அந்த விளக்கத்தில், “எடப்பாடி பழனிசாமி எப்போது தூக்கத்திலிருந்து விழித்தார் எனத் தெரியவில்லை. மக்களைத் தேடி மருத்துவம் தொடங்கப்பட்ட கிருஷ்ணகிரி மாவட்டம் சாமனப்பள்ளி தொடங்கி, ஒரு கோடியே ஓராவது பயனாளி கண்டறியப்பட்ட திருச்சி சன்னாசிபட்டி வரை, முதலாவது பயனாளி, 50 லட்சமாவது பயனாளி, 60 லட்சமாவது பயனாளி, 75 லட்சமாவது பயனாளி, 80, 90 லட்சமாவது பயனாளி, ஒரு கோடியே ஓராவது பயனாளி என்ற நீண்ட வரலாற்றை மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் கொண்டிருக்கிறது.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்

இது உலகில் எந்தவொரு நாட்டிலும் செய்யப்படாத ஒரு அற்புதமான காரியம். இதைத்தாங்கிக் கொள்ளமுடியாமல் வயிற்றெரிச்சல் காரணமாக இப்படியான செய்திகளைப் பரப்புகிறார்கள். ஒரு கோடி பயனாளிகள் யார் யார்? எடப்பாடியில் எத்தனை பயனாளிகள் இருக்கின்றனர்? சேலத்தில் எத்தனை பேர் இருக்கின்றனர்? பயனாளிகள் பெயர், விலாசம் அவருக்கான நோய் தன்மை உள்ளிட்ட எல்லா விவரங்களும் தற்போது தயார் நிலையில் இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி விருப்பப்பட்டால், டிபிஎச் அலுவலகத்திற்கு வந்து தேவைப்பட்டால் பார்த்து தெரிந்து கொள்ளலாம். அதைவிடுத்து அறிக்கைகள் மூலம் மக்களை குழப்பலாம் என்று நினைத்தாலும், குழம்பி குட்டையில் மீன்பிடிக்கலாம் என்று நினைத்தாலும் நிச்சயம் நடக்காது. இது அவருக்கு அழகான விஷயமும் அல்ல!” என பதிலளித்திருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.