ஈரோடு மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி மின் ஊழியர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருவாரூர் மாவட்டம் ஆலம்பாடி பகுதியை சேர்ந்தவர் சிவசங்கர் (28). இவர் பெருந்துறை மின்சார வாரியத்தில் மின் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி கவிதா. இவர்களுக்கு நான்கு மாத பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் சிவசங்கர் பெருந்துறை மருத்துவக் கல்லூரி அருகே மின்சார அலையினை மாற்றி விடுவதற்காக மின்கம்பத்தில் ஏறியுள்ளார்.
அப்பொழுது எதிர்பாராத விதமாக சிவசங்கர் மின்சாரம் தாக்கி, சம்பவ இடத்திலேயே உடல் கருகி மின் கம்பத்திலேயே தொங்கிய நிலையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மின்வாரிய அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு துறையினர், மின்கம்பத்தில் தொங்கிய சிவசங்கரின் உடலை கைப்பாற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.