மோடி, அமித்ஷா யார் வந்தாலும் வெற்றி எங்களுக்கு தான்; சித்தராமையா உறுதி.!

224 தொகுதிகள் கொண்ட கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கு வரும் மே மாதம் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2018 சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 104 (36.35%), காங்கிரஸ் 80 (38.14%), மதச்சார்பற்ற ஜனதா தளம் 37 (18.3%), மற்றவை 3 என வெற்றி பெற்றன. ஆட்சியை பிடிக்க 113 இடங்களை கைப்பற்ற வேண்டும். ஆனால் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத காரணமாக காங்கிரஸ் – மதச்சார்பற்ற கூட்டணி ஆட்சி அமைத்தது. ஆனால் 14 மாதங்களில் ஆட்சி கலைக்கப்பட்டு பாஜக ஆட்சியை பிடித்தது.

இதன் பின்னணியில் காங்கிரஸ் – மதச்சார்பற்ற கூட்டணி எம்.எல்.ஏக்கள் விலை போன சம்பவமும், இடைத்தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட நிகழ்வும் அரங்கேறின. அதன்பிறகு எடியூரப்பா, பசவராஜ் பொம்மை என இரண்டு பாஜக முதல்வர்கள் பதவி வகித்தனர். இந்த சூழலில் தான் 2023 சட்டப்பேரவை வரவுள்ளது. கடந்த தேர்தலை போல இல்லாமல் அறுதி பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடிக்க பாஜக திட்டமிட்டுள்ளது.

மொத்தமுள்ள 224 தொகுதிகளில் குறைந்தது 150 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என இலக்கு நிர்ணயித்துள்ளது. இம்முறை கூட்டணி கணக்குகள் மாறும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. மதச்சார்பற்ற ஜனதா தளம் உடன் பாஜக கைகோர்க்குமா எனக் கேள்வி எழுந்த நிலையில், அதற்கு வாய்ப்பில்லை என அக்கட்சி தலைமை முற்றுப்புள்ளி வைத்துள்ளது. எனவே பாஜக தனித்து களமிறங்க அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

சட்டப்பேரவை தேர்தலை தொடர்ந்து காங்கிரஸ், பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றன. 200 யுனிட் வரை இலவச மின்சாரம், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 2000 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகளை காங்கிரஸ் அளித்துள்ளது.

இந்தநிலையில் பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தனக்கு எதிராக பிரசாரம் செய்தாலும் நிச்சயம் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று கர்நாடகா முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறும்போது, “பாஜக தேசிய பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் வரட்டும், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, பிரதமர் நரேந்திர மோடி அல்லது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் எனக்கு எதிராக பிரச்சாரம் செய்தாலும், கோலாரில் நான் நிச்சயம் வெற்றி பெறுவேன்.

இன்னும் 4 மாதங்கள் உள்ள சட்டமன்றத் தேர்தலில் கோலார் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்ததில் இருந்தே எதிர்மறையான பிரச்சாரம் தொடங்கியுள்ளது. எனக்கு எதிராக தொகுதியில் கையேடு விநியோகிக்கப்படுகின்றன. இருப்பினும் வெற்றி எங்களுக்கே.

2018 சட்டமன்றத் தேர்தலில் நான் போட்டியிட்ட பாதாமி தொகுதியிலும் அதே முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அமித் ஷா மற்றும் பிற மூத்த பாஜக தலைவர்களின் பிரச்சாரத்தையும் மீறி நான் வெற்றி பெற்றேன். பாதாமி மக்கள் என்னை அங்கு விரும்புகிறார்கள், ஹெலிகாப்டருக்கு ஸ்பான்சர் செய்யவும் தயாராக உள்ளனர்.

ஆனால் வயது தொடர்பான பிரச்சினைகள் மற்றும் தூரம் காரணமாக, கோலாரில் இருந்து தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளேன்’’ என அவர் கூறினார். கடந்த முறை பதாமி தொகுதியில் போட்டியிட்ட சித்தராமையா தற்போது கோலார் தொகுதிக்கு மாறியுள்ளது குறிப்பிடதக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.