ராமஜெயம் கொலை வழக்கில் உண்மை கண்டறியும் பரிசோதனை இன்று நிறைவு: இறுதி அறிக்கை தயாரிக்கும் பணி விரைவில் தொடங்கும்

சென்னை: ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக நடைபெற்று வந்த உண்மை கண்டறியும் சோதனை இன்றுடன் நிறைவடைகிறது.

அமைச்சர் கே.என்.நேருவின் தம்பியும், திருச்சியைச் சேர்ந்ததொழில் அதிபருமான ராமஜெயம்,2012 மார்ச் 29-ம் தேதி நடைபயிற்சிசென்றபோது கடத்தப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கை தற்போது, சிபிசிஐடி எஸ்பி ஜெயக்குமார் தலைமையில், டிஎஸ்பி மதன், சென்னை சிபிஐயைச் சேர்ந்த ரவி உள்ளிட்டோர் அடங்கியசிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது.

இதற்கிடையே, ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக 12 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த போலீஸார் முடிவு செய்தனர். அதற்கான அனுமதியை திருச்சி நீதிமன்றம் வழங்கியது. அதைத்தொடர்ந்து, சென்னை மெரினா சாலையில் உள்ள தடய அறிவியல் துறை அலுவலகத்தில் உண்மை கண்டறியும் சோதனை கடந்த புதன்கிழமை தொடங்கியது.

முதல்நாளில், சந்தேக நபர்கள் பட்டியலில் இடம் பெற்றிருந்த திண்டுக்கல் மோகன்ராம் (44), அதே மாவட்டத்தைச் சேர்ந்த நரைமுடி கணேசன் (49), தினேஷ்குமார் (38), மயிலாடுதுறை சத்யராஜ் (40) ஆகிய 4 பேரிடம் டெல்லி மத்திய தடயவியல் துறையைச் சேர்ந்த நிபுணர்கள் உண்மை கண்டறியும் சோதனை மேற்கொண்டனர். ராமஜெயம் கொலை தொடர்பாக அவர்களிடம் தலா 12 கேள்விகள் கேட்கப்பட்டு பதில்கள் பெறப்பட்டன.

மறுநாள் செந்தில், கலைவாணன், ராஜ்குமார், சுரேந்திரன் ஆகியோரிடமும், நேற்று சாமி ரவி, மாரிமுத்து, சிவா ஆகியோரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. மீதமுள்ள ராஜ்குமார் என்பவரிடம் இன்று விசாரணை நடைபெறவுள்ளது.

இதையடுத்து 12 பேரிடமும் நடத்தப்பட்ட விசாரணை அனைத்தையும் அறிக்கையாக தயார் செய்து அதை சிறப்பு புலனாய்வு குழுவினரிடம் தடயவியல் துறைநிபுணர்கள் வழங்க உள்ளனர். இந்த அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளதாக சிபிசிஐடி பிரிவு போலீஸார் தெரிவித்துள்ளனர். அதன்பின்னரே கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகநீடித்து வரும் ராமஜெயம் கொலை வழக்கில் துப்பு துலங்கியதா? என்பது பற்றி தெரிய வரும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.