சென்னை: பாஜக தலைவர் அண்ணாமலையை சந்திக்க தனது தரப்பைச் சேர்ந்த சிலர் வருவதற்கு தாமதமானதால் பாஜக அலுவலகத்தில் காத்திருந்ததாக அதிமுகவின் ஜெயக்குமார் தெரிவித்தார்.
ஈரோடு சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா மாரடைப்பால் மரணம் அடைந்ததைத் தொடர்ந்து அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஈரோடு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கு பாஜக ஆதரவு தர வேண்டி இபிஎஸ் அணியினர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை சந்தித்தனர்.
இந்த நிலையில் அண்ணாமலை சந்திப்பதற்கு முன்னர் சில நிமிடங்கள் இபிஎஸ் தரப்பு காத்திருக்க வைக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் ஜெயக்குமார் பேசியது, “நாங்கள் பாஜக அலுவலகத்துக்கு சற்று விரைவாக வந்துவிட்டோம். ஆனால் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், வேலுமணி, தங்கமணி ஆகியோர் வந்த கார் போக்குவரத்து நெரிசல் காரணமாக பாஜக அலுவலகம் வர தாமதமாகிவிட்டது. அவர்களுக்காகத் தான் காத்திருந்தோம். மற்றபடி இதில் எந்த அரசியலும் இல்லை” எனக் கூறியுள்ளார்.
மேலும் ஒபிஎஸ் குறித்து பேசும்போது, “ ஓபிஎஸ் திமுகவின் பி டீமாக செயல்பட்டு வருகிறார். ஓபிஎஸ், பிஹார், ஒடிசா என்று எங்கு போனாலும் அதைப் பற்றி கவலையில்லை. ஓபிஎஸ் வேட்பாளரை நிறுத்தினால் சுயேட்சை வேட்பாளராக தான் கருத முடியும்.
ஓபிஎஸ் நிறுத்தும் வேட்பாளர் நோட்டாவை விட குறைவான வாக்குகளை தான் பெறுவார்” என்றார்.