கொல்கத்தா: நேதாஜியின் கொள்கைகளுக்கு எதிரான ஆர்எஸ்எஸ் என் தந்தையின் புகழை சுரண்டவே அவரது பிறந்தநாளை கொண்டாட திட்டமிட்டுள்ளது என நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் மகள் அனிதா போஸ் தெரிவித்துள்ளார். நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் பிறந்தநாளையொட்டி நாளை மேற்குவங்க மாநிலம் ஷாகித் மினார் மைதானத்தில் நடக்கவுள்ள பொதுக்கூட்டத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் உரையாற்ற உள்ளார்.
இதுகுறித்து நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் மகள் அனிதா போஸ் கூறியதாவது, ”அனைத்து மதத்தினரையும் மதிக்க வேண்டும். அனைவரும் அமைதியாக வாழ வேண்டும் என்பதே என் தந்தையின் கனவு. ஆனால், அதற்கு எதிரான சித்தாந்தங்களை கொண்டது ஆர்எஸ்எஸ். என் தந்தையின் சித்தாந்தமும், ஆர்எஸ்எஸ்சின் சித்தாந்தமும் இரு நேர் எதிர் துருவங்கள். என் தந்தையின் பெயரை வைத்து லாபம் பெறவே அவரது பிறந்தநாளை கொண்டாட ஆர்எஸ்எஸ், பா.ஜ அமைப்பினர் திட்டமிட்டுள்ளனர். நேதாஜியின் கொள்கைகள் காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளுடன் மட்டுமே ஒத்துவரும்” என்று தெரிவித்துள்ளார்.