குற்றவாளிகள் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றனர்; நீதி கிடைக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன்: பலாத்காரத்திற்கு ஆளான பெண் கண்ணீர்

மொஹாலி: நீதி கிடைக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்று பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான பெண் புகார் அளித்துள்ள நிலையில், குற்றவாளிகள் இருவரும் சுதந்திரமாக சுற்றித் திரிவாக தெரிவித்துள்ளார். பஞ்சாப் மாநிலம் மொஹாலியை சேர்ந்த 23 வயது இளம் பெண் ஒருவர் கும்ப்ரா பகுதியில் வாடகைக்கு வீடு தேடிக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த இருவர், வாடகை வீட்டைப் பார்த்து தருவதாக கூறி அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக மொஹாலி போலீசில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தார்.

தொடர்ந்து குற்றவாளிகள் மீது வழக்குபதிவு செய்யப்பட்ட நிலையில், அவர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில், ‘என்னை பாலியல் பலாத்காரம் செய்த இருவரும் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றனர். இரண்டு மாதங்களாக நீதிக்காக போராடி வருகிறேன். முதல்வர், டிஜிபி ஆகியோருக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனக்கு நீதி கிடைக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன்’ என்று தெரிவித்தார்.

இதுகுறித்து மொஹாலி டிஎஸ்பி ஹர்சிம்ரன் சிங் பால் கூறுகையில், ‘ குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கும் எதிராக கடந்த நவம்பர் 10ம் தேதி ஐபிசி பிரிவு 376 மற்றும் 506-இன் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டது. தலைமறைவாக இருக்கும் இருவரையும் தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள்’ என்று கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.