மும்பை: மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி தனது பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளார். மகாராஷ்ட்ராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா – பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. மகாராஷ்டிரா ஆளுநரான பகத்சிங் கோஷ்யாரி மராட்டிய மன்னர் சிவாஜி குறித்து அவதூறாக சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கடந்த நவம்பர் மாதம் புகார் எழுந்தது. அதனைத் தொடர்ந்து அவர் மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
இந்நிலையில் கடந்த 19ம் தேதி மும்பை வந்த போது பிரதமர் மோடியிடம் ஆளுநர் பதவியில் இருந்து விலக விருப்பம் தெரிவித்துள்ளதாக ராஜ்பவன் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ராஜ் பவன் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில்; ஆளுநர் கோஷ்யாரி தனது வாழ்நாள் முழுவதையும் வாசிப்பு, எழுதுதல் மற்றும் பிற நிதானமான செயல்களில் செலவிட விருப்பம் தெரிவித்துள்ளார். புனிதர்கள், சமூக சீர்திருத்தவாதிகள் மற்றும் வீரம் மிக்க போராளிகளின் பூமியாக உள்ள மகாராஷ்டிரா போன்ற ஒரு பெரிய மாநிலத்தின் ராஜ்ய சேவக் அல்லது ராஜ்யபாலாக (ஆளுநர்) பணியாற்றுவது எனக்கு கவுரவம். பாக்கியம்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியை அண்மையில் சந்தித்த போது, அனைத்து விதமான அரசியல் பொறுப்புகளில் இருந்தும் விலக விருப்பம் தெரிவித்தேன், எஞ்சியுள்ள தனது வாழ்க்கையை எழுதவும், படிக்கவும், சமூக செயல்பாடுகளில் ஈடுபடவும் விரும்புகிறேன் என ஆளுநர் தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.