திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையில் கடும் பனிமூட்டம் காரணமாக அரசு பேருந்து கவிழ்ந்த விபத்தில் 15 பேர் காயமடைந்துள்ளனர்.
திண்டுக்கலில் இருந்து 18 பயணிகளுடன் அரசு பேருந்து ஒன்று இன்று அதிகாலை சிறுமலை நோக்கி சென்று கொண்டிருந்தது. பேருந்தை தேனி மாவட்டத்தை சேர்ந்த விஜயகுமார் என்பவர் ஓட்டி சென்றார். இந்நிலையில் பேருந்து 18வது கொண்டை ஊசி வளைவில் சென்ற போது, கடும் பனிமூட்டம் காரணமாக பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் ஓடிவந்து மீட்பு பணியில் ஈடுபட்டு, விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் 15 பேர் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த திண்டுக்கல் தாலுகா போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.