பாஜகவின் ‘பி டீம்’களாக செயல்படும் 3 கட்சிகள் – ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு

புதுடெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை தற்போது ஜம்மு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ராகுல் காந்தியின் பாதயாத்திரைக்கு வெளியில் இருந்து ஆட்கள் கொண்டுவரப்படுவதாக காங்கிரஸை விட்டு விலகிய முன்னாள் மூத்த தலைவரும், டிஏபி கட்சியின் நிறுவனருமான குலாம் நபி ஆசாத் கூறினார்.

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:

குலாம்நபி ஆசாத்தின் டிஏபி கட்சி இன்னும் தேர்தல் ஆணையத்தால் பதிவு செய்யப்படவில்லை. அசாதுதீன் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம், ஆம் ஆத்மி கட்சி, டிஏபி ஆகிய 3 கட்சிகளும் பாஜகவின் ‘பி டீம்’கள் ஆகும். காங்கிரஸின் வாக்குகளை குறைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் இவை உருவாக்கப்பட்டுள்ளன.

குலாம் நபி ஆசாத்தின் கட்சியில் இருந்து தலைவர்களும் தொண்டர்களும் காங்கிரஸுக்கு திரும்புகின்றனர். ஆசாத்தின் கட்சி தற்போது தோடாவில் மட்டுமே உள்ளது. அது தோடா ஆசாத் கட்சியாக மாறியுள்ளது.

காங்கிரஸ் வாக்குகளை குறைப்பதற்காக குலாம் நபி ஆசாத்தை பிரதமரும் உள்துறை அமைச்சரும் அனுப்பி வைத்தனர். அவர்களின் உத்தி தோல்வி அடைந்துள்ளது. காஷ்மீரில் இதுவரை நடந்த பேரணியில் பங்கேற்ற அனைவரும் உள்ளூர்வாசிகள். இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.