காங்., தென்னிந்திய முகமாக மாறும் கமல்…? ஹேக்கர்களின் சேட்டை – நீடிக்கும் பிரச்னை

மக்கள் நீதி மய்யம் கட்சி, 2018ஆம் ஆண்டு நடிகர் கமல்ஹாசனால் தொடங்கப்பட்டது. தொடர்ந்து, 2019 மக்களவை தேர்தல், 2021 சட்டப்பேரவை தேர்தலில் அந்த கட்சி எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறாததால், சிறு பின்னடைவு ஏற்பட்டதாக அரசியல் வல்லுநர்கள் கருதினர். 

அக்கட்சியின் தலைவரான கமல்ஹாசனும், கோயம்புத்தூர் தெற்கு தொகுதியில் தோல்வியடைந்தது அக்கட்சிக்கு பெரும் ஏமாற்றத்தையே அளித்தது. இருப்பினும், அக்கட்சியினர் தொடர்ந்து, களத்திலும் இணையத்திலும் இயங்கி வருகின்றனர். 

வரும் பிப். 27ஆம் தேதி நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், மக்கள் நீதி மய்யம் தனது ஆதரவை திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு வழங்கியது. முன்னதாக, நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு வரும் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்ராவில் கமல்ஹாசன் பங்கேற்றிருந்தார். இதனால், அவர் தேசிய அளவில் காங்கிரஸ் உடனும், மாநில அளவில் திமுக உடனும் அக்கட்சி நெருக்கமாக உள்ளதாக கூறப்பட்டது. 

அந்த வகையில், அக்கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில்,”மக்கள் நீதி மய்யம் 2024 லோக்சபா தேர்தலுக்கான பெரிய அறிவிப்பு” என்ற தலைப்பில் செய்தி வெளியீடு ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில்,”அவர் முறையான இணைப்பு 30 ஜனவரி 2023 அன்று நடைபெறும்” என குறிப்பிட்டிருந்தது. அதாவது, மக்கள் நீதி மய்யம் கட்சியை, காங்கிரஸ் கட்சியுடன் இணைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனால், பலரும் அதிர்ச்சியடைந்த நிலையில், அக்கட்சியின் இணையதளம் ஹேக்கர்களால் முடக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து, மக்கள் நீதி மய்யத்தின் செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸ்,”இந்த தகவலில் ஒருதுளிக்கூட உண்மையில்லை. காங்கிரஸ் கட்சியுடன் இணைக்கும் எந்த திட்டமும் எங்களுக்கு இல்லை. எங்கள் இணையதளம் முடக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார். தற்போது, அக்கட்சியின் இணையதளம் மீட்கப்பட்டு வருவதாக முகப்பு பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கை பார்க்கும்படியும் குறிப்பிட்டுள்ளது. 

முன்னதாக, அக்கட்சியின் ட்விட்டர் பக்கத்தில்,”மக்கள் நீதி மய்யம் கட்சியின் அதிகாரப்பூர்வ வலைதளம் விஷமிகளால் ஹேக் செய்யப்பட்டுள்ளது. ஜனநாயக சக்திகளை ஒடுக்கியே பழக்கப்பட்ட ஈனர்களின் இழிசெயல்களுக்கு அஞ்சாமல் தக்க பதிலடி கொடுப்போம்” என பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.   தற்போது, இச்சம்பவம் அரசியல் வட்டத்தில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.