தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பரிசு 1000 ரூபாயை இத்தனை பேர் வாங்கவில்லையா? ஏன்?

தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பரிசு 1000 ரூபாயை 4 லட்சத்து 40 ஆயிரம் பேர் வாங்கவில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள ரேசன் கடைகளில் பொங்கல் பரிசு தொகை 1000 ரூபாய், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தார். அதன்படி தகுதியுள்ள 2 கோடியே 18 லட்சத்து 86 ஆயிரத்து 123 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 பணம் ஒதுக்கப்பட்டு அந்த தொகை ரேசன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த பணத்தை பெரும்பாலான மக்கள் வாங்கினாலும் ஒரு சிலர் இந்த பணம் வேண்டாம் என்று வாங்காமல் இருந்துவிட்டனர்.
சென்னையை எடுத்துக்கொண்டால் வட சென்னையில் 10 லட்சத்து 18 ஆயிரத்து 728 குடும்ப அட்டைகளுக்கும், தென் சென்னையில் 10 லட்சத்து 39 ஆயிரத்து 552 குடும்ப அட்டைகளுக்கும் தலா ரூ.1000 பணம் வழங்க ரேசன் கடைகளுக்கு பணம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
image
ஆனால் வடசென்னையில் 9 லட்சத்து 83 ஆயிரத்து 5 பேரும், தென் சென்னையில் 9 லட்சத்து 90 ஆயிரத்து 14 பேர் மட்டுமே பொங்கல் பரிசு பணம் ரூ.1000 வாங்கி சென்றுள்ளனர். வடசென்னையில் ஆயிரத்து 723 35 குடும்ப அட்டைதாரர்களும் தென் சென்னையில் 49 ஆயிரத்து 538 குடும்ப அட்டைதாரர்களும் பணத்தை வாங்கவில்லை.
இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 8026 அட்டைதாரர்களும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 10,263 அட்டைதாரர்களும், திருவள்ளூர் மாவட்டத்தில் 8,874 அட்டைதாரர்களும் 1000 ரூபாய் மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்கவில்லை. தமிழ்நாடு முழுவதும் 4 லட்சத்து 39 ஆயிரத்து 669 குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசு தொகை வாங்காததால் அரசுக்கு ரூ.43 கோடியே 96 லட்சத்து 69 ஆயிரம் பணம் திரும்பி வந்துவிட்டது. தொகையை அரசு கருவூலத்தில் அதிகாரிகள் செலுத்தி விட்டனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.