உஷாரா இருங்க…பாம்பன், தூத்துக்குடி துறைமுகத்தில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ள காரணமாக தூத்துக்குடி துறைமுகத்தில் முதற்கட்டமாக ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. தற்போது கடல் பகுதியில் 30 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசி வருவதால் தூத்துக்குடி துறைமுகத்தில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 
மேலும் வங்க கடல் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது, மேலும் தமிழகத்தின் கடற்கரை மாவட்டங்களில் இன்று பலத்த மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் மீன்வளத் துறை சார்பில் விசைப்படகு மற்றும் நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்கு செல்லக்கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதை அடுத்து முன்றாவது நாளாக தூத்துக்குடி மாவட்டத்தில் விசைப்படகு மற்றும் நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

தூத்துக்குடி விசைப்படகு மீன்பிடி துறைமுகத்தில் 250 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதேபோன்று திரேஷ் புரம் நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்தில் 500க்கும் மேற்பட்ட நாட்டு படகு மற்றும் பைபர் படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தென்மேற்கு திசையாக நகர்ந்து இன்று அதிகாலை இலங்கை கடற்கரை பகுதிகளை கடக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தென் தமிழக மாவட்டங்களிலும், வட தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி காரைக்கால் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் மிதமான மற்றும் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. 

இதனுடைய கடந்த மூன்று நாட்களாக நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வந்த நிலையில் இன்று அதிகாலை முதல் நாகை நாகூர் வேளாங்கண்ணி வேதாரண்யம் சிக்கல் கீழையூர் கீழ்வேளூர் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இந்த தொடர் மழை காரணமாக, நாகை மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள. அதேபோல் கடல் சீற்றம் மற்றும் கனமழை காரணமாக, நாகை மாவட்டத்தில் உள்ள ஆயிரக்கணக்கான மீனவர்கள் இன்றும் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. மீனவர்களின் படகுகள் அனைத்தும் பாதுகாப்பாக துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

மறுபுறம் கடந்த இரண்டு நாட்களாக டெல்டா மாவட்டங்களில் அவ்வப்போது காற்றுடன் பலத்த மழை பெய்து வருவதால், இன்று மயிலாடுதுறை மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.